Friday, January 31, 2014

மனிதர்களை விட.....

'அக்கா நாளைக்கு நம்ம பத்மாக்கு ரிசல்ட் இல்லியா' 

'ஆமாம் சரசு...  பதட்டமா இருக்கு'

'கவலப் படாதீங்கக்கா அதெல்லாம் பத்மா நல்ல மார்க் வாங்கி பாஸாயிரும்'

'இல்லம்மா பயமா இருக்கு'

'எனக்கு நல்ல நம்பிக்க இருக்குக்கா'

'ஏம்மா சரசு, நாளைக்கு உங்க போனுக்குத்தான் போன் பண்ணும். சுரேசுட்ட போன லைன் கெடக்கற எடத்துல வெக்க சொல்லும்மா'

'சரிக்கா, ஃபோன் வந்தா அப்பவே வந்து சொல்ல சொல்லியிருக்கேன்'

'சரிம்மா, மட்டக் காட்டைய்யா வர்றார், அப்பறமா பேசுவோம்'

ஈட்டியார் எஸ்டேட்டில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள் வள்ளியும் அவரது கணவர் ராமரும். சொந்த ஊரான திருநெல்வேலியிலிருந்து இங்கு வந்து  பல வருடங்கள் ஆகிவிட்டது. படிப்பறிவில்லாத இவர்களுடைய மகள் பத்மாவதி இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

கணவன் மனைவி இருவருமே மிகவும் சாந்தமானவர்கள். யாரிடமும் எந்த வம்பு சண்டைக்கும் செல்லாத இவர்களை அந்த எஸ்டேட்டில் பிடிக்காதவர்கள் யாருமில்லை. வள்ளி பேசுகின்ற அளவிற்குக்கூட ராமர் யாரிடமும் பேசமாட்டார்.

அடுத்த நாள் வேலைக்குப் போவதற்கு முன், 'ரிசல்ட் வந்துச்சுன்னா உடனே போன் பண்ணுமா' என்று பலமுறை சொல்லிவிட்டு போனார் வள்ளி.

தோட்டத்தில் தேயிலை பறிக்கும்போது  'ஃபோன் எப்போது வரும், ரிசல்ட் என்ன ஆகும்' என்று வள்ளியின் மனது பதறிக் கொண்டே இருந்தது.

10 மணிக்கு சுரேஷ் ஓடிவருவதை பார்த்த சரஸ்வதியும், வள்ளியும் 'பத்மா பாஸாயிருச்சா' என்று கத்தினார்கள்.

'பத்மாக்காதான் வால்பாறை பஃஸ்ட்' என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் சுரேஷ்.

'மாரியம்மா இந்த வருஷம் உன் கோயில் திருவிலாவுக்கு கடா வெட்டறேன்' என்றார் வள்ளி கண்ணீர்மல்க.

'அக்கா, பாத்தீங்களா நான் சொல்லல'

கொழுந்து மூட்டையை இறக்கிக் கூட வைக்கமால் அப்படியே சரஸ்வதியை கட்டிப் பிடித்தார் வள்ளி.

'சரசு, நான் மட்டக் காட்டைய்யாட்ட அர நாள் லீவ் சொல்லிட்டு போட்டா. சந்தோஷத்துல கை கால் ஓடலம்மா'

'சரிக்கா.. நீங்க சொல்லிட்டுப் போங்க. நான் சாயங்காலம் வந்து பத்மாவ பாக்கறேன்'

சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு ஃபீல்ட் ஆஃபிஸர், ப்ரேம் ஆனந்திடம் சென்றார்.

'அய்யா, பொண்ணு பத்தாம் க்ளாஸ் பாஸ் ஆயிருச்சு. அதுதான் வால்பாறைலயே அதிக மார்க்காம்'

'சந்தோசம் வள்ளி. நல்லாப் படிப்பாளா?'

'நல்லாப் படிக்கும் அய்யா. எப்படியும் அத கலெக்டர் ஆக்கிரணுங்கறதுதான் எங்க ஆசை'

'அவ விருப்பத்தையும் கேளுங்க. எப்படியும் முதல்ல எஞ்சினியரிங் இல்லன்னா மெடிக்கல் படிக்கட்டும் அப்புறமா ஐஏஎஸ் எழுதட்டும்'

'சரிங்கய்யா, இன்னைக்கு அர நாள் லீவ் வேணும்'

'போங்க. வேணும்னா நாளைக்கும் சேத்து லீவ் எடுத்துக்கோங்க'

'வேண்டாய்யா, நாளான்னைக்கு ஞாயித்துக்கெலம லீவ் தான'

அவரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் பத்மாவாதியும் வந்துவிட்டார். ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்.

'இரும்மா, அப்பாக்கு ஃபோன் பண்ணி செல்லுவோம். அப்பாக்கு இன்னைக்கு எங்க வேல'

'கவாத்து. ஏலாம் நம்பர் காடு. மாடசாமி அய்யா இருப்பார். அவருக்கு போன் பண்ணு'

'சார், எங்க அப்பா ராமர்ட்ட பேசணும். நான் பாஸாயிட்டேன்னு சொல்லணும் சார்'

'அப்படியா சந்தோஷம்மா. எவ்வளவு மார்க்?'

'496 மார்க் சார். நான்தான் வால்பறைல அதிக மார்க்'

'கங்க்ராஜூலேஷன்ஸ். இரும்மா அப்பாவ கூப்பிட்டு கொடுக்கிறேன்'

விஷயத்தைக் கேள்விப் பட்டு சந்தோஷப் பட்டாலும் அதை வெளிப்படுத்த தெரியவில்லை ராமருக்கு.

ஞாயிற்றுக் கிழமை புதிய கட்டிடம் ஒன்றை திறக்க வரும் கலெக்டர், முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப் போவதாக தலைமை ஆசிரியர் பத்மாவதியிடம் சொல்லியிருந்தார்.

'ஞாயித்துக் கெலம கலெக்டர் எனக்குப் பரிசு குடுக்கப் போறார். நீங்களும் அப்பாவும் கண்டிப்பா வரணும்'

'நாங்க மட்டுமில்ல, எங்க காட்டுல வேல செய்யற எல்லாரையும் வரச் சொல்லுவேன்' என்றார் வள்ளி சந்தோஷமாக.

பலரும் வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து விட்டுப் போனார்கள். சில பத்திரிகை நிருபர்களும் வந்து பேட்டி எடுத்தார்கள்.

காவு கொடுக்க வளர்த்து வந்த ஆட்டைப் பார்த்து, 'என்னால உன்னக் கொல்லப் போறாங்களா. கவலப் படாத. பொங்கலுக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு. அதுக்குள்ளே அம்மாட்ட ஏதாவது சொல்லி உன்னக் காப்பாத்திருவேன்' என்றார் பத்மாவதி. 

அடுத்த நாள் வள்ளி, அவருடன் வேலை செய்யும் அனைவரையும் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள, அவர்களும் வருவதாக சொன்னார்கள்.

அன்று இரவு வள்ளியிற்கு தூக்கம் வரவேயில்லை. ஒரு வழியாக 2 மணிக்கு தூங்கிய சிறிது நேரத்தில், பத்மா எழுந்து போவதை  வள்ளியால் உணர முடிந்தது.

'வெளிய சட்டில சுடு தண்ணி இருக்கு எடுத்துட்டுப் போம்மா, டார்ச் எடுத்துட்டுப் போ' என்றார் பாதி தூக்கத்திலேயே.

'சரிம்மா'.

அதற்குப் பிறகு காலை 5 மணிக்குத் தான் வள்ளியின் தூக்கம் கலைந்தது. அருகில் பத்மாவதி இல்லை. 'பத்மா பத்மா' என்று கூப்பிட்டுப் பார்த்து பதில் ஏதும் வராததால் சற்றே பதற்றமானார்.

'அய்யோ. என்னங்க எந்திரிங்க. நடுச்சாமத்துல பாத் ரூம் போக எந்திருச்சுப் போன பத்மாவக் காணோம்ங்க'

'வெளிய எங்கயாவது நிக்கும் பாரு' என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்தார்

'இல்லீங்க. பாத்துட்டேன் எங்கயும் இல்லீங்க'

'பக்கத்துல யார் வீட்டுக்காவது போயிருக்கும். வந்திரும்'

'5 மணிக்கு யார் வீட்டுக்குப் போகப் போவுது' என்று வள்ளி சொன்னவுடன்தான் ராமரும் பயப்பட ஆரம்பித்தார்.

வெளியே சென்று தேடினார்கள். வள்ளிப் பக்கத்து வீட்டுக்காரர்களையும் கூப்பிட, எல்லோருமாக சேர்ந்து தேடினார்கள். வள்ளியைக் காணவில்லை.

பழைய பாடி, புதுப் பாடி, கப்பப் பாடி ஆகியவை ஈட்டியாரில் இருக்கும் குடியிருப்புகளின் பெயர்கள். இதில் பழைய பாடியில் சில வீடுகளில் கழிப்பறை வீடோடு சேர்ந்து இருக்காது. சிறிது தொலைவில் சற்றேத் தாழ்வான பகுதியில் இருக்கும். தெரு விளக்குகளும் இருக்காது.

கழிவறைகள் இருந்த பகுதியில் சென்று தேடிய பொழுது, அருகில் ஒரு புதரில் டார்ச் லைட் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த உடனே ராமரும் வள்ளியும் அழ ஆரம்பித்தனர். மற்றவர்கள் 'ஒன்னும் ஆயிருக்காது, கீழ விழுந்திருக்கும். போய் பாப்போம்' என்று சமாதானப்படுத்தினர்.

அதற்குள் அங்கு ஓடி வந்த கிருஷ்ணன், 'அண்ணா, நம்ம பாப்பாவை புலி அடிச்சிருச்சு. புள்ள காம்ராட்ட கொண்டு போய் போட்டிருக்கு' என்றார் அழுதுகொண்டே.

கதறி அழுதவாறே, வள்ளியும் ராமரும் ஓடினார்கள். அவர்கள் மட்டுமில்லை அனைவரும் அந்த இடத்தை நோக்கி ஓடினர்.

புலி கடித்துக் கதறி வைத்திருந்த உடலைப் பார்த்ததும் மயங்கிவிட்டார் வள்ளி. ராமரோ, தரையில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் வால்பாறையிலிருந்து தாசில்தார், டீஎஸ்பி, எம்எல்ஏ என அனைவரும் அங்கு வந்தனர்.

உடலை எடுக்க எஸ்டேட் மக்கள் சம்மதிக்கவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று சொல்லி தர்ணா போராட்டம் செய்தனர்.

தோட்டத் தொழிலளர்கள் சங்கத் தலைவர் எம்எல்ஏவிடம், "சார், இதுவரைக்கும் நம்ம எஸ்டேட்டில் மட்டும் அஞ்சு பேரை கொன்னிருக்கு. புள்ள குட்டிக ராத்திரி வெளியவே வரமுடியல. இதுக்கு நீங்கதான் ஒரு முடிவு கட்டணும்" என்றார்.

'ஒரு மாசத்துக்குள்ள வனத்துறை புலியைப் புடிச்சு ஊட்டி இல்லன்னா மூணார்ல கொண்டு போய் விட்டுருவாங்க. இதுக்கு நான் கேரண்டி. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?'

'அங்க கொண்டு போய்விட்டா. இது அங்க மட்டும் சும்மா இருக்குமா. மனுஷ ரத்த ருசி கண்டிருச்சு. இனி சும்மா இருக்காது'

'இல்ல. குடியிருப்புப் பகுதிகளுக்கு வரமுடியாத மாதிரி ஏதாவது அடர்ந்த காட்டுப் பகுதிலதான் விடுவாங்க'

'சார், அதெல்லாம் வந்திரும். எங்காவது சூல கொண்டுபோய் விடச் சொல்லுங்க'

'அதை நான் பாத்துக்கறேன். உங்களுக்கு இனி பிரச்சனை வராது. எல்லாரும் கலைஞ்சு போங்க'

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, மக்கள் போராட்டத்தை கைவிட பத்மாவின் உடலை எடுத்துக் கொண்டு போனார்கள்.

சில நாட்களிலேயே இந்த விஷயத்தை அனைவரும் மறந்து போனார்கள். ராமரும் வள்ளியும் மட்டும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.

அன்று, வள்ளி ராமரிடம் 'என்னங்க, ரெண்டு மாசம் முன்னாடி மாரியப்பண்ணன் ஒரு வெஷத்தப் பத்தி சொன்னாரே. அத வாங்கிட்டு வரீங்களா' என்றார்

'என்ன ஆச்சு உனக்கு?'

'சொன்னாக் கேளுங்க. வாங்கிட்டு வாங்க'

அதிகம் பேசமால் சரி என்றார் ராமர்.

அடுத்த நாள் காலை, 'அக்கா, அக்கா' என்று அழைத்துக் கொண்டே வள்ளி வீட்டிற்கு வந்த சரஸ்வதி முற்றத்தில்  இருந்த வள்ளியைப் பார்த்து, 'இங்கதான் இருக்கீங்களா' என்றார்

'ம். சொல்லும்மா'

'அக்கா, அந்தப் புலி செத்திருச்சு. பத்தாம் பாத்தில செத்துக் கெடக்குதாம். அங்க ஒரே கூட்டமாம். டிவி ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்களாம்'

தலையை ஆட்டியவாறே மாரியம்மனுக்கு காவு கொடுக்க வளர்த்து வந்த ஆட்டைக் கட்டி வைந்திருந்த இடத்தைப் பார்த்தார். உடனே சரஸ்வதியும் அந்த இடத்தைப் பார்த்தார். ஆடு இல்லை.  அருகில் சென்ற சரஸ்வதிக்கு, அங்கு கிடந்த அறுபட்ட ஆட்டின் காதையும், காலி விஷ பாட்டிலையும் பார்த்ததும் விஷயம் புரிந்துவிட்டது.

வள்ளியிடம் வந்து, 'அக்கா, அந்தப் பாட்டிலை எங்கயாவது குழி தோண்டி பொதச்சிருவோம். இந்த இடத்தையும் சுத்தம் பண்ணிருவோம்' என்றார்.

'அடப்போ சரசு. என் புள்ளயே  போச்சு. இனி எங்கள போலிஸ் புடிச்சு ஜெயில்ல போட்டா என்ன ஆகப் போது?  இனியாவது எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க இல்ல. இனிமே யாரும் இதுமாதிரி புள்ளைய பலி கொடுத்துட்டு நரக வால்க்க வாலக் கூடாது'

அடுத்த நாள் சென்னையில் போராட்டம்,

போராட்டக்காரர்களில் ஒருவர் டிவிக்கு பேட்டி கொடுக்கிறார்.

'வன விலங்குகளைப் பற்றி வனத்துறையினருக்கோ அரசாங்கத்திற்கோ சிறிதும் அக்கறை இல்லை. அவைகளும் நம்மைப்போல இந்த பூமியில் வாழ  உரிமையுள்ள உயிரினங்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.  அழிந்துவரும் அரிய வகை புலி இனங்களில் ஒன்று நேற்று  வால்பாறையில் கொல்லப்பட்டுள்ளது. இதனைப் பற்றி தீவிர  விசாரணை நடத்தவேண்டும். இந்த கொடும் செயலை செய்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி  சரியான  தண்டனை  வாங்கிக் கொடுக்கவேண்டும்'