Friday, March 21, 2014

ஃபேஸ்புக்....

//தோழர்களே,

ஒரு சிறிய பிரச்சனை. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள்,
மனிதன்//

இந்த ஸ்டேட்டஸ் போட்டு ஒருமணிநேரத்தில் வழக்கம் போல ஐநூறுக்கும் மேற்பட்ட லைக்குகள். லைக்குகளைவிட அதிகம் கமெண்ட்டுகள்.

//கவலைப்படாதீங்க, உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்//
//பாஸ், நாங்க இருக்கோம//
//என்ன ஆச்சு?//
//என்ன பிரச்சனை//

இப்படி நூற்றுக் கணக்கான கமெண்ட்டுகள், அவற்றில் பெரும்பாலானவை ஆறுதல் சொல்லும் விதமாக இருந்தன.

சில வருடங்களுக்கு முன்பு, சென்னை குண்டுவெடிப்பு பற்றி மனிதன் எழுதிய கட்டுரைதான் பலரையும் அவரைத் திரும்பிப் பார்க்கவைத்தது. 'மாணவி கற்பழிப்பு', 'பெண்ணுரிமை', 'குழந்தைத் தொழிலார்கள்', 'நலிந்தவர்கள்', 'மண்ணா? பொன்னா?', 'பெண் குழந்தை', 'பாலியல் தொழில்' போன்றவை அவர் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்கை பொழுதுபோக்காக மட்டுமின்றி நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துபவர்களில் மனிதனும் ஒருவர். இன்று காலையிலிருந்து அவரது மனைவியையும் குழந்தைகளையும் காணவில்லை. மனைவியின் ஃபோனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு போட்டதுதான் அந்த ஸ்டேட்டஸ்.

டீ போட்டு குடித்துவிட்டு வெளியே சென்று தேடலாம் என்று நினைத்து செல்ஃபோனில் ஃபேஸ்புக் பார்த்தவாரே சமையலறைக்கு சென்ற மனிதன், அங்கு அவர் மனைவி எழுதிவைத்திருந்த கடிதத்தைப் பார்த்தார்.

//அன்புள்ள மனிதனுக்கு,

உங்களுக்கு மனைவியாக இருக்கத் தகுதியில்லாத நித்யா எழுதுவது.
நல்ல நோக்கத்தோடு எழுதிவரும் உங்களைப் பத்தி என்னுடைய சிற்றறிவுக்கு இதுவரை புரியாமல் இருந்தது. இதுக்காக எத்தனை தடவை உங்ககிட்ட சண்டை போட்டிருக்கிறேன்னு நெனைக்கும்போது வருத்தமா இருக்கு. ஆனா, நீங்களோ பெண்ணுரிமை பத்தி ஃபேஸ்புக்கில் எழுதும்போதும் என்னைப் பத்தி எவ்வளவு பெருமையா எழுதியிருக்கீங்க. அதையும் நீங்க காமிச்சதுக்கு அப்புறம்தான் இந்த மரமண்டைக்குப் புரிஞ்சது.

இந்த சமூகத்திற்காக சமூக வலைத்தளத்தில் நீங்க  கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது நான் கேவலமான விஷயங்களுக்காக சண்டை போட்டதை நெனச்சா வருத்தமா இருக்கு.

நாட்டை எப்படியாவது திருத்த நினைக்கும் உங்ககிட்ட, 'பையனுக்கு என்னைக்காவது பாடம் சொல்லிக் குடுத்துருக்கீங்களா?' 'குழந்தை அழுதா எப்பவாவது தொட்டில் ஆட்டியிருக்கீங்களா?' 'பசங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கீங்களா?' 'எல்லாமே நானே தானே செய்யவேண்டியிருக்கு' 'குடும்ப விஷயங்களைப் பத்தி என்னைக்காவது கவலைப் பட்டிருக்கீங்களா?' இதுமாதிரி எத்தனையோ விஷயங்களை சொல்லி சண்டை போட்டிருக்கேனே. ச்சீ நான் எல்லாம் மனுஷியா?

உங்கள் கடமை உணர்வை முழுசா தெரிஞ்சிக்கிட்டது நான் மட்டும்தான். உங்க சந்தோஷத்தையும் துக்கத்தையும் நிர்ணயிக்கறது உங்க போஸ்டுகளுக்கு கிடைக்கும் லைக்குகள்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ராத்திரி தூக்கத்துல இருந்து எப்ப எந்திரிச்சாலும் நீங்க முதல்ல பாக்கறது உங்க போஸ்டுகளுக்கு வந்த லைக்களையும் கமெண்ட்டுகளையும்தான். எத்தனை முறை எந்திரிச்சாலும் சலிக்காம அதைப் பாப்பீங்களே. வேலை நேரத்தில்கூட பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை பாப்பீங்கன்னு உங்க கூட வேலை செஞ்சவங்க சொல்லிருக்காங்க. இதைப் புரிஞ்சுக்காம உங்க பழைய கம்பெனி உங்களை வேலையைவிட்டு தூக்கிட்டாங்களே.

எங்கப்பாகூட உங்களைப் பத்தி புரிஞ்சுக்காம, உங்களுக்காக இல்லாம நானும் புள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதுன்னு ஒரு செல்ஃபோன் கடை வெச்சுக் குடுத்தார். பாவம், உங்களால அதைக்கூட சரியாப் பாத்துக்க முடியல.

எங்க போனாலும், அங்க நடக்கற எந்த விஷயத்தை ஸ்டேட்டஸாப் போடாலாம்னு எப்பவுமே அதைப் பத்தியே நெனச்சிட்டு இருப்பீங்களே. திடீர் திடீர்ன்னு எதையோ நெனச்சு சிரிப்பீங்களே... சினிமாவுக்கு முதல் ஷோவுக்கே எப்படியாவது டிக்கெட் வாங்கிக் கூட்டிட்டுப் போவீங்களே. அதுவும் இண்டர்வல்ல மத்த குழந்தைகள் ஐஸ்க்ரீம் பாப்கார்ன் சாப்பிடறத நம்ம குழந்தைகள் ஏக்கமா பாத்தாலும் பரவாயில்லைன்னு படத்தப் பத்தி சுடச்சுட ஸ்டேட்டஸ் போடுவீங்களே.

வீட்டு வேலை செய்யறதுக்கிடையில டீவிக்கு முன்னாடி  நடந்து போகும்போது டீவில ஓடற சீரியலைப் பார்ப்பதை கிண்டல் செய்து எத்தனை ஸ்டேடஸ்கள் போட்டிருப்பீங்க... 24 மணிநேரமும் அறிவுப்பூர்வமான ஃபேஸ்புக்கைப் பாத்துட்டு இருக்கும் உங்களுக்கு சீரியல் பாப்பவங்களைப் பாத்தா சிரிப்புத்தான் வரும்னு  இந்த முட்டாளுக்குப் புரியாமப் போச்சே?

இந்த விஷயங்களைப் புரிஞ்சதுக்கு அப்புறம், நானும் குழந்தைகளும் இனி ஒரு நாளும் உங்களுக்குத் தொந்தரவா இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். போறோம். இனிமே எங்க வாழ்க்கைல நீங்க இல்லை.

இப்படிக்கு,

முட்டாள் மனுஷி //

இதைப் படித்தவுடன் நித்யாவும் குழந்தைகளும் எங்க போயிருப்பார்கள் என்று மனிதனால் யூகிக்க முடிந்தது.

மாமனார் வீட்டிற்கு சென்று எவ்வளவோ கெஞ்சியும் நித்யா சம்மதிக்கவில்லை.

'ஏம்மா, மாப்பிள்ளை இவ்வளவு தூரம் சொல்றாரே. போயேன்மா' என்றனர் நித்யாவின் அப்பாவும் அம்மாவும்.

'உங்களுக்கு தெரியாதும்மா. அவர் திருந்தமாட்டார். தயவுசெஞ்சு என்னை விட்டிருங்க.'

'நித்யா, சொன்னா நம்பு.. நான் செஞ்சது தப்புன்னு புரிஞ்சிருச்சு.. பாரு நான் இந்த விஷயத்துல செஞ்ச தப்புகள் எதையும் மறைக்காம அப்படியே வெளிப்படையா ஒரு ஸ்டேட்டஸாப் போட்டிருக்கேன்'  என்றார் மனிதன்.

'ஐயோ' என்று கத்தியவாறே கைகள் இரண்டையும் தலையில் வைத்துக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தார் நித்யா.