Friday, March 20, 2015

வேலை

//மு.கு: நீங்கள் எழுதும் கதைகள் மற்றும் சம்பவங்களில் வருபவர்கள் எல்லோரும் பொதுவாக நல்லவர்களாகவே இருக்கிறார்களே என்று நண்பர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. எனவே, இந்த முறை விதிவிலக்காக ஒரு சம்பவம்.

ஒருவேளை, இந்த சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவரை நான் தவறாக புரிந்துகொண்டிருக்கலாம். அதேபோல,அவருடைய பார்வையில் நான் கெட்டவனாகக்கூட இருக்கலாம்.//

எஞ்சினியரிங் முடித்தவுடன் குஜராத்தில் வேலை. முதல் ஒரு வருடம் ஒவ்வொரு துறையிலும் சில நாட்கள் பயிற்சி எடுக்கவேண்டும் என்று உத்தரவு இருந்தாலும், ப்ராஜெக்ட்டிற்கு சென்றவுடன், எந்தத் துறையில் ஆள் தேவையோ அங்கு நிரந்தரமாக்கிவிடுவார்கள்.

அப்படித்தான், என்னையும் செக்ஷன் த்ரீயில் வெங்கட்ராமன் சாருக்கு துணையாக அனுப்பிவிட்டார்கள். அந்த செக்ஷன் முழுவதையும் சப்-காண்ட்ராக்ட் கொண்டிருந்தார்கள், அவர்களை கண்காணிப்பதுதான் எங்களது வேலை.

எங்களது கம்பெனி ஒரு மலேசியன் கம்பெனியுடன் சேர்ந்துதான் அந்த ப்ராஜெக்ட்டை செய்தது. அந்தக் கம்பெனியை சார்ந்தவர்கள் அந்தப் ப்ராஜெக்ட்டில் மொத்தமே இரண்டு பேர்தான். ஓன்று லீ சார், அவர் டெப்டி ப்ராஜெக்ட் மேனேஜர், மற்றொருவர் செல்வசுந்தரம் சார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது. உடனே இவர்தான் வில்லன் என்று யூகித்திருப்பீர்கள்).

செல்வசுந்தரம் சார் ஒரு மலேசியத் தமிழர். ஒரு தமிழர் இவ்வளவு பெரிய பதவியில் இருந்ததால் எங்களுக்கு சந்தோசம், அவருடன் சற்றே உரிமையுடன்தான் பேசுவோம்.

ஒருமுறை அப்படி அவருடன் பேசும்போது, அதே உரிமையில் அவருடன் விவாதம் செய்துவிட்டேன், அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதில் அவருடைய தவறு இல்லை, எனக்கு பக்குவம் இல்லை, யாருடன் எப்படி பேசவேண்டும் என்று தெரியாமல் போய்விட்டது.

அதற்குப் பிறகு, அவர் என்னுடன் அவ்வளவாக பேசமாட்டார், ஆனால் என் நண்பன் முத்துவுடன் நன்றாகப் பேசுவார். எங்களுடைய ப்ராஜெக்ட் மேனேஜர் சப்ரே சாருக்கு செல்வா சாரை பிடிக்காது. சப்ரே சாரை சிறிது நாளில் வேறொரு ப்ராஜெக்ட்டிற்கு மாற்றம் செய்துவிட்டார்கள். அவருக்குப் பதிலாக அமிர்தலிங்கம் சார் வந்தார். ஆம், அவரும் தமிழர்தான். அவரும் செல்வா சாரும் சில நாட்களிலே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். அதற்குப் பிறகு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு செல்வா சாருடன் ஆலோசனை செய்வதனை வழக்கமாக வைத்திருந்தார் அமிர்தலிங்கம் சார்.

என்னை செக்ஷன் த்ரீயிலிருந்து, DBM (Dense Bituminous Macadam) செக்ஷனுக்கு மாற்றிவிட்டார்கள். DBM என்பது அஸ்ஃபால்ட் (தார்) சேர்த்து கலவை செய்து போடும் ஒரு லேயர். இதைப் பற்றி விளக்கமாக சொல்லாமல் விஷயத்திற்கு வருகிறேன்.

DBM செக்ஷன், இன்-சார்ஜ் ஸ்ரீநிவாஸ் சாருக்கு துணையாக என்னை மாற்றிவிட்டார்கள். செல்வா சாரின் கீழ்தான் இந்த செக்ஷனும் இருந்து வருகிறது. காலையில் 5 மணிக்கு சைட்டுக்குப் போனால், இரவு 8 மணிக்கு மேல்தான் திரும்பி வரமுடியும். முழு நேரமும் சைட்டில் வேலை இருந்து கொண்டே இருக்கும். ஒரு நாளில் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் அளவு (ரோட்டின் பாதி விட்த்) இந்த வேலை நடக்கும். ஐந்து அல்லது ஆறு முறையாவது அந்த இரண்டு கிலோ மீட்டரையும் ஆரம்பம் முதல் கடைசி வரை நடக்கவேண்டி வரும். குஜராத்தில் வெப்பநிலை 40 டிக்ரி செல்சியஸுக்கும் அதிகம். மதியம் வேலையாட்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் தூங்கினாலும், எனக்கு ஓய்வே இருக்காது. ஸ்ரீநிவாஸ் சார், காலையில் ஒருமுறையும் மதியம் ஒருமுறையும் சைட்டிற்கு வருவார். அவ்வளவுதான்.

என்னுடைய நிலை மட்டுமல்ல, ட்ரைனியாக வேலை செய்யும் சிவில் எஞ்சினியர்களின் நிலைமை பொதுவாக இப்படித்தான் இருக்கும்.

ஒருமுறை, 'மூணு மாசமா DBM வேலைக்கு ஏன் இதுவரை பேமென்ட் கிடைக்கல' என்று அமிர்தலிங்கம் சார் கேட்டார். நான் அப்போது டெய்லி பராக்ரெஸ் ரிப்போர்ட் எழுதுவதற்காக சைட் எஞ்சினியர்கள் அறைக்கு சென்றிருந்தேன். அங்கு வந்துதான் அவர் கேட்டார், செல்வா சார் உடனே என்னைக் கை காண்பித்து, 'இதா இவன்தான் காரணம், சர்வே லெவல் ரிப்போர்ட் இவன் எழுதிக் குடுக்கல. அதான் பிரச்சனை' என்றார்.

எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஏனென்றால், எனக்கும் சர்வே லெவல் ரிப்போர்ட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதை எழுதுவதற்கு சர்வேயர்களும் அவரது அசிஸ்டன்ட்களும் இருக்கிறார்கள். அமிந்தலிங்கம் சார் என்னை பயங்கரமாக திட்டிவிட்டார். என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை. அமிர்தலிங்கம் சார் போனவுடன் செல்வா சாரிடம், 'சார், சர்வே லெவல் ரிப்போர்ட் நான் எழுதணும்ன்னு எனக்குத் தெரியாது சார்' என்றேன். 'என்ன தெரியாது, உனக்குத் தெரியாதா, மூணு மாசமா பேமென்ட் கெடைக்கலன்னு தெரியாதா? என்ன பிரச்சனைன்னு கேக்க வேண்டாமா? சும்மா இருக்கும்போது எழுதிருக்கலாமே?' என்றார். நான் ஒன்றும் பேசவில்லை. மூணு நாளைக்குள்ள எல்லாம் எழுதி முடிச்சரணும்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் சென்ற பிறகு, சர்வேயரிடம் என்ன எழுதவேண்டும் என்று கேட்டேன். என்னைத் திட்டியதில் அவருக்கும் வருத்தம். அப்போது மணி சுமார் எட்டு இருக்கும். ரூமிற்கு செல்லவில்லை, சாப்பிடவும் இல்லை. இரவு பனிரெண்டு மணிவரை எழுதி அதைக் கொண்டு போய் அப்பொழுதே அமிர்தலிங்கம் சாரிடம் கொடுத்தேன். 'சார், எங்க அம்மா மேல சத்தியமா இந்த வேலைய நான் செய்யணும்னு எனக்குத் தெரியாது சார். டெய்லி நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யறேன், ஆனா, நீங்க என்ன சோம்பேறின்னு எல்லாம் சொல்லி திட்டுனீங்க சார்' என்றேன்.

இல்லப்பா, கோவத்துல எதோ சொல்லிட்டேன், நீ போய் செல்வா சார்கிட்ட பேசு' என்று சொன்னார். நான் செல்வா சாரிடம் பேச விரும்பவில்லை. சர்வேயரிடம் கொண்டுபோய் அந்த லெவல் ஷீட்களைக் கொடுத்தேன்.

சில் மாதங்களுக்குப் பிறகு சித்பூர் டவுனில் வேலை நடந்தது, ப்ளான்ட்டில் (மற்றும் கேம்பில்) இருந்து ஐந்து கிலோமீட்டர்தான் அந்த இடம். எனவே, அன்று ரெக்கார்ட் செய்யவேண்டும் என்று செல்வா சாரும் ஸ்ரீநிவாஸ் சாரும் முடிவு செய்தனர். மாலை ஆறு மணி ஆனபொழுது, சுமார் 700 டன் லே செய்துவிட்டோம். அந்தப் ப்ராஜெக்ட்டின் சூப்பர்வைசிங் கன்சல்டன்ட் நிறுவனமான LBI-இலிருந்து அதன் ARE (Assistant Resident Engineer) சஞ்சய் சிங் சார் சைட்டிற்கு வந்திருந்தார். அப்ரூவல் இல்லாமல் வேலை செய்கிறோம் என்று என்னைக் கண்டபடி திட்டினார். ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும், அது என்னுடைய முடிவு இல்லை என்று. அவர்களை திட்ட முடியாததால் என்னை திட்டிவிட்டுச் சென்றார்.

செல்வா சாரும் ஸ்ரீநிவாஸ் சாரும் ப்ளான்டிற்கு சென்று இரவு முழுவதும் அங்கு இருந்து தண்ணி அடித்துக் கொண்டு அங்கு ரிஜெக்ட் செய்திருந்த எல்லா மெட்டீரியல்களையும் எடுத்து பயன்படுத்த சொல்லியிருக்கிறார்கள்.

காலை எட்டு மணிக்குத்தான் வேலை முடிந்தது. இருபத்தி நான்கு மணிநேரத்திற்கும் அதிகமாக சைட்டில் இருந்தேன். கேம்பிற்கு சென்றவுடன் அனைவரும் வாழ்த்து சொன்னார்கள் ஹெட் ஆஃபீஸில் இருந்தும் வாழ்த்து செய்தி வந்திருந்தது.

நான் ரூமிற்கு சென்று தூங்கிவிட்டேன். பதினோரு மணிக்கு செல்வா சாரிடம் இருந்து ஃபோன் வந்து ஆஃபீஸிற்கு சென்றபோதுதான் தெரிந்தது அந்த வேலை முழுவதையும் LBI ரிஜெக்ட் செய்துவிட்டார்கள் என்று.

செல்வா சார் என்னை முதல் நாள் வேலை செய்த சைட்டில் கொண்டு போய்விட்டுவிட்டு, 'நல்லா நடந்து பார், எங்கயாவது ஏதாவது பிரச்சனை இருக்காணு பாத்து வை' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். டவுன் என்பதால் ஏற்கனவே அதில் வண்டிகள் செல்ல ஆரம்பித்துவிட்டன. தலையில் ஹெல்மெட்டும், கண்களில் சேஃப்டி கோகல்ஸும், உடம்பில் ரிப்லெக்டிங்க் வெஸ்ட்டும் அணிந்து கொண்டு தனியாக அந்த ரோட்டில் பலமுறை நடந்தேன். பிரச்சனை இருந்த இடங்களை எல்லாம் நோட்டில் குறித்து வைத்துக் கொண்டேன்.

அந்த வழியாக சென்ற ஸ்ட்ரக்சர் இன்-சார்ஜ் சுபாஷ் சார் வண்டியை நிறுத்தி, 'ஏன் இப்படி தனியா நடந்துட்டு இருக்க' என்று கேட்டார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் போய்விட்டார், சிறிது நேரத்தில் சைட்டில் இருந்து திரும்ப ஆஃபீஸிற்கு போகும்போது கை காண்பித்துவிட்டுப் போனார். சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் சைட்டிற்குப் போகும்போது, 'இன்னும முடியலியா' என்பது போல சைகையிலேயே கேட்டுவிட்டுப் போனார்.

அவர் திரும்பி வந்தபோது, 'உனக்கு வேற வேலையில்லையா... நீ ஒரு எஞ்சினியர்.. இப்படியா லூசு மாதிரி நடந்துட்டு இருக்கறது. அதுவும் யாரும் இல்லாம. வா வந்து வண்டில ஏறு' என்று சொன்னார். 'இல்ல சார், நீங்க போங்க. நா அப்பறமா வர்றேன்' என்றேன். ஆனால் அவர் விடவில்லை,வலுக்கட்டாயமாக என்னை அவருடன் அழைத்துக்கொண்டு சென்றார்.

ஒரு கிலோமீட்டர் கூட போயிருக்கமாட்டோம். செல்வா சாரின் பொலெரோ வந்தது. அவர் நான் வண்டியில் இருப்பதைப் பார்த்து வண்டியை கொஞ்சம் முன்பில் சென்று நிறுத்திவிட்டு, சுபாஷ் சாருக்கு போன் செய்து வரச் சொன்னார்.

வண்டியை நிறுத்தியவுடன், 'இவனை எதுக்கு கூட்டிட்டு போறீங்க என்றார் சுபாஷ் சாரிடம். அவர் பதில் சொல்வதற்கு முன்பு, நான், 'சார் எல்லாம் நோட் பண்ணீட்டேன். அதான் ஆஃபீஸுக்குப் போறேன்' என்றேன்.

'எதுக்கு ஆஃபீஸுக்குப் போற? are you going to maxxxxxte there?' என்று சொல்லிக் கத்தினார். பாவம் சுபாஷ் சார், அவரது முகம் வாடிப் போய்விட்டது. செல்வா சாரின் வண்டியில் ஏறி மீண்டும் சைட்டில் இறங்கினேன்.

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும், 'தம்பி வேலை ரொம்ப கஷ்டமா' என்று அப்பா கேட்கும்போது, 'இல்லப்பா, ஒரு வேலையும் இருக்காதுப்பா, ரொம்ப ஈசி ' என்று சொன்னதும். கடைசிவரை மற்றவர்களுக்கு காசு கொடுத்தேப் பழகிப் போன தாத்தாவிற்கு நான் காசு கொடுக்கும்போது அவர் முகத்தில் வரும் சந்தோஷமும். 'இப்படி மெலிஞ்சிட்டயேப்பா, கறுத்துப் போயிட்டீயேப்பா' என்றெல்லாம் அம்மா சொல்லும்போது, 'இல்லம்மா, அங்க வெயில் அதிகம் அதான். ரொம்ப ஜாலிம்மா வேலை' என்று சொன்னதும் நியாபகத்தில் வந்து, 'இப்பத்தான், அப்பாவோட சொமைய கொஞ்சம் நான் ஏத்துக்கிட்டு இருக்கேன், திரும்பி அவர் மேலேயே எல்லாத்தையும் வெச்சறக்கூடாது' என்று மனதில் சொல்லிக் கொண்டே கண்களில் பாதுகாப்புக் கண்ணாடியை மாட்டிக்கொண்டேன் கண்ணீர் வெளியே தெரியாமல் இருக்க.


கனவுகளுடன்....


அம்மா, அப்பா ஆசைப்படுவதுபோல ஒரு வேலைக்குப் போனால், நான் படித்த டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பிற்கு குறைந்தது பதினைந்தாயிரம் ரூபாயாவது சம்பளம் கிடைக்கும்.
இத்தனை வருடம் கஷ்டப்பட்டது இதற்குத்தானா? வாரத்தில் ஒருநாள், இல்லை ஒருநேரம் நல்ல சாப்பாடு கிடைத்தாலே பெரிய விஷயம். எங்களது டைரக்டருக்கு மீண்டும் ஒருபடம் கிடைத்தால், நிம்மதியாக மூன்று நேரமும் செட்டில் சாப்பிடலாம். செலவிற்கு பணமும் கிடைக்கும். பாவம் அவரது முதல் படம் தோல்வியடைந்ததால் அவருடைய நிலைமையே மிகவும் பரிதாபமாகிவிட்டது.
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட கேட்டதில்லை, ஊருக்குப் போகும்போதெல்லாம், என்னால் முடிந்த எதையாவது கொடுத்துவிட்டுத்தான் வருகிறேன். இரண்டு வருடம் ஆகின்றது வீட்டிற்கு சென்று.
இந்த நிலையில்தான் இன்று வீட்டிலிருந்து ஃபோன், அவர்கள் என்னை தலைமுழுகிவிட்டார்களாம். ஃபோன் பண்ணும்போதெல்லாம், 'ஏதாவது வேலைக்குப் போ சாமி' என்று சொல்லி அழும் அம்மா இன்று பேசவில்லை. 'இனி ஒனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த வீட்டுல இருந்து யாரும் உன்கூட இனி பேசமாட்டாங்க. நாங்க செத்தாலும் நீ வரக்கூடாது' என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் அப்பா.
வாராவாரம் ஃபோன் செய்து குறைந்தது அரைமணிநேரமாவது திட்டுவார் அப்பா. சென்றமுறை ஃபோன் செய்திருந்தபோது, அடுத்தவாரம் ஒரு முடிவு சொல்லவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். நான் என் முடிவை மாற்றிக்கொள்ளாததால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இரண்டுமுறை ஃபோன் செய்து அவர்கள் எடுக்காததால் இனி அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று விட்டுவிட்டேன்.
கவலைகளை மறந்து சற்றுநேரம் நிம்மதியாக இருப்பதற்கு, மாலை நேரங்களில் கோவிலிற்கு சென்று மண்டபத்தில் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். கடவுள் நம்பிக்கையெல்லாம் என்றோ இல்லாமல் போய்விட்டது. என் உழைப்பையும், திறமையும் தவிர வேறெதையும் நம்புவதில்லை.
ஒரு குழந்தைக்கு காது குத்துவதால் இன்று அந்த மண்டபத்தில் படுக்க முடியவில்லை. அவர்கள்மேல் தவறு இல்லை, பொதுவாக மாலை நேரங்களில் வரும் நான் இன்று காலையிலேயே வந்துவிட்டேன்.
கோவில் பின்புறமாக இருந்த அரசமரத்தடியில் படுத்துவிட்டேன். படபடத்துக் கொண்டிருந்தது மனது. சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிவிட்டேன். எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை, யாரோ 'வருண்' என்று அழைத்தபோதுதான் உறக்கம் கலைந்தது. அப்பாவின் குரல் போன்றிருந்தது. எழுந்தபோது நல்ல இருட்டு, யாருமே அங்கு இல்லை. மணி பார்ப்பதற்கு கடிகாரமும் இல்லை, மொபைலில் சார்ஜும் இல்லை.
கோவில் கதவை அடைத்துவிட்டதால் வெளியே செல்லமுடியாது. சத்தம் போட்டால் யாராவது உதவுவார்கள் என்றாலும், அதற்கு மனம் வரவில்லை. மண்டபத்தில் இருந்த தூணில் சாய்ந்தவாறே அமர்ந்து காலையில் அப்பா சொன்ன வார்த்தைகளை மீண்டும், மீண்டும் நினைத்துப் பார்த்தேன். அவர்கள் என்னை தலைமுழுகி விட்டாலும், என்னால் அவர்களை மறக்கமுடியாது. எவ்வளவு பெரிய ஆளானாலும், அவர்கள்தான் எனக்கு முக்கியம்.
'வருண்' மீண்டும் அப்பாவின் குரல்.
'யாரு, யாரது' என்றேன் எழுந்து நின்று சுற்றிமுற்றி பார்த்தவாறே
'நான் யார் என்பது இருக்கட்டும், உனது பிரச்சனை என்ன?' என்று குரல் மட்டும் வந்தது.
'யாருங்க நீங்க, உங்களுக்கு எப்படி என் பேர் தெரியும்?'
'நான் யார் என்பது முக்கியம் இல்லை'
'சரி நீங்க முதல்ல என் முன்னாடி வாங்க'. அப்புறம் பேசுவோம்' என்றேன் சற்றே பயந்தவாறே.
திடீரென்று என் பின்னால் இருந்து யாரோ என் தோளில் கைவைக்க, உடல் நடுங்கிய வண்ணம் திரும்பினேன்.
ஒரு வயதான பெரியவர், என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
'யார் நீங்க. கடவுளா?'
பதில் சொல்லாமல் சிரித்தார்.
'எனக்குத்தான் உங்க மேல நம்பிக்கை இல்லையே. அப்பறம் ஏன்? என்னப் பாத்தா உங்களுக்கு பாவமா இருக்கா?'
மீண்டும் சிரித்தார்.
'நான் என்ன தப்பு செஞ்சேன்?, என்னோட லட்சியம் ஒரு டைரக்டர் ஆகணும், நல்ல படங்கள் எடுக்கணும். அதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படறேன். யாருக்கும் நான் தொந்தரவா இல்ல''
'எட்டாக் கனிக்குத்தான் ஆசைப் படவேண்டுமா?'
'எது எட்டாக் கனி. சச்சின் அபப்டி நெனச்சிருந்தா, இன்னைக்கு அவரால கிரிக்கெட்ல இவ்வளவு சாதன செஞ்சிருக்கமுடியுமா?. ஷங்கரும் படிச்சது என்ன மாதிரி டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங்தான். அவர் இத எட்டாக் கனியா நெனச்சிருந்தா, இன்னைக்கு இவ்வளவு பெரிய டைரக்டர் ஆகிருக்க முடியுமா?'
'ஜெயித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், ஆனால் தோற்றவர்கள் லட்சக் கணக்கில் என்பதை உணரவில்லையா?'
''என்னோட திறம மேலயும் உழைப்பு மேலயும் நம்பிக்கை இருக்கு'
'இந்தத் துறையில் அதுமட்டும் போதுமா?'
'அது உண்மதான். இன்னைக்கு காசு இருக்கறவன் எல்லாம் டைரக்டர் ஆயிர்றான். டிஸ்ட்ரிப்யூட்டர்களும், ப்ரொடுயூசர்களும் இவங்க எடுக்கற குப்ப படங்கள நம்பறாங்க. என்ன மாதிரி திறம உள்ளவங்க இப்படியே கஷ்டப்பட்டுட்டு இருக்கவேண்டியதுதான். அதனாலதான் தமிழ்படங்களோட தரமும் இப்படி இருக்கு'
'சீர்குலைந்துள்ள தமிழ் சினிமாவை சரிசெய்ய, உன்னிடம் என்ன திட்டம் உள்ளது?'
'கிண்டல் பண்றீங்களா'
'உனக்கு நல்ல படமாக தெரிவது, எப்படி ஒரு சிறந்த படம் என்று கூறுகிறாய்?'
'புரியல'
'உனக்கு ஒரு படம் குப்பையாக தெரிகிறது. அதே சமயத்தில் அந்தப் படம் வேறு ஒருவருக்கு சிறந்ததாக தோன்றியதால்தான் அந்தப் படத்தை எடுத்தார். அதேபோல, உனக்கு சிறந்ததாக தெரியும் படம் வேறு சிலருக்கு குப்பைப் படமாக தெரியலாம் இல்லையா?'
'என்ன சொல்ல வர்றீங்க'
'சச்சின் சாதனை செய்த துறையில் திறமை இருந்தால் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் நீ தேர்ந்தெடுத்திருக்கும் துறை அப்படி இல்லை. ஒரு சினிமாவின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது பலதரப்பட்ட ரசனையுள்ள ரசிகர்கள்தான். அவர்களால் குப்பைப் படத்தை ஜெயிக்கவைக்கவும் முடியும், உன்னைப் போன்ற திறமைசாலிகளின் உலகத்தரத்தில் எடுக்கும் படங்களை தோல்வியடைய செய்யவும் முடியும்'
'நல்ல, டைரக்டருக்கு எப்படி படம் எடுத்தா பாக்கறவங்களுக்குப் புடிக்கும்ணு தெரியும்'
'சற்றுமுன், சீர்திருத்தப் போகிறாய் என்றாய். இப்போது ரசிகர்களுக்கு பிடிப்பதுபோல் படம் எடுக்கவேண்டும் என்கிறாயே'
'உங்ககிட்ட நான் எந்த உதவியும் கேக்கல. ஏன் இப்படி வெந்த புண்ணுல வேலப் பாச்சுறீங்க?'
'திறமை இல்லாதவர்களிடம் பணம் இருப்பதால் வாய்ப்பு கிடைப்பதாக சொன்னாயே, திறமை இல்லாமல் எப்படி அவர்களுக்கு பணம் கிடைத்தது?'
'அவங்க அப்பா பணம். அரசியல்வாதிகள் குழந்தைகளுக்கு பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம படம் எடுக்கறாங்க'
'நல்ல வழிகளில் சம்பாதித்த பணக்காரர்கள் யாரும் படம் இயக்கவில்லையா?'
'இருக்காங்க. யூ எஸ்ஸில் சாஃப்ட்வேர் எஞ்சினியரா வேல செஞ்சு காசு சம்பாதிச்சுட்டு, ரெண்டு மூணு ஷார்ட் ஃபிலிம் எடுக்கறாங்க. அப்பறமா அத வெச்சு சான்ஸ் வாங்கறாங்க'
'அவர்களை எப்படி தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்?'
'நஷ்டத்துல பெர்செண்டேஜ் கொடுக்கறதா சொல்லித்தான இவங்க சான்ஸ் கேக்கறதே'
'நீயும் ஏன் அப்படி செய்யக் கூடாது'
'முதல்லயே செஞ்சிருக்கணும். இப்ப முடியாது. அதுமட்டுமில்லாம நான் படிச்சுமுடிச்சு வெளிய வந்தப்ப ஷார்ட் ஃபிலிம் எடுக்கறதெல்லாம் ரொம்ப கம்மியா இருந்துச்சு'
'நீ ஏன் வேலைக்குப் போகக்கூடாது. சம்பாதித்துவிட்டு இந்தத் துறைக்கு மீண்டும் வரலாமே?'
'கடைசி எக்ஸாம் முடிஞ்சு ரெண்டாவது நாள் சென்னைக்கு வந்தேன், இப்ப பன்னெண்டு வருஷம் ஆச்சு. இனி வேலைக்குப் போனா எவ்வளவு சம்பளம் கெடைக்கும்'
'ஒன்றும் சம்பாதிக்காமல் தற்போது நீ வாழவில்லையா? வேலைக்குப் போனால், கிடைக்கின்ற சம்பளத்தில் கொஞ்சம் சேமித்து வைத்தாலே வருடத்திற்கு ஒரு குறும்படம் எடுக்கமுடியாதா?'
'நீங்க யாரு. கடவுளா. இல்ல எங்க வீட்டுல இருந்து அனுப்பி வெச்சாங்களா. அவங்க பேசற மாதிரியே பேசறீங்க'
பதில் சொல்லாமல் சிரித்தார்.
'தயவு செஞ்சு போயிருங்க. என்னோட கனவுகள தூக்கி எரிஞ்சுட்டு வேற வேல செய்யமுடியாது. ப்ளீஸ் போங்க நீங்க'
'சரி உன் ஆசைப்படியே போகிறேன். போகும் முன் ஒன்று சொல்லிவிட்டு போகிறேன். நீ நினைத்ததுபோல, உன் மேல் பரிதாபப்பட்டு நான் வரவில்லை. ஓய்வெடுக்க வேண்டிய வயதில், ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் அந்த இரண்டு ஜீவன்களுக்காகத்தான் நான் வந்தேன்' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
அதற்குப் பிறகு எப்பொழுது உறங்கினேன் என்று தெரியவில்லை. எழுந்தபோது நல்ல வெயில். மெதுவாக நடந்தேன். அந்த மண்டபத்தில், குழந்தைக்கு அப்பொழுதுதான் காது குத்துகிறார்கள்.
நடந்ததெல்லாம் கனவா?
காது குத்தியபோது, அந்தப் பையன் கத்தி அழுதாலும், அவன் கண்களில் வழிந்ததைவிட அதிகம் அவனது அம்மா, அப்பாவின் கண்களில் வழிந்த நீர்.....