ஜூன் 4, 2014
இன்னைக்கு பொண்ணு பாக்க வந்த பையனை எனக்கு சுத்தமா புடிக்கல. ரெண்டு பேருக்கும் பொருத்தமே இல்ல. ஐயோ, இந்தப் பையனைப் போய் 'கட்டிக்கோ கட்டிக்கோ'ன்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்களே அப்பாவும் அம்மாவும். எப்படியாவது எவன் தலையிலயாவது கட்டி வெச்சு, அவங்க தலைல இருக்கற பாரத்த இறக்கி வெச்ச்ச்ச்சறணும். அப்பாங்களுக்கு பெண் குழந்தைகளை உண்மைல புடிக்குதா இல்லையாங்கறது கல்யாணம் ஆகாமல் பொண்ணுங்க வீட்டுல இருக்கும்போதுதான் தெரியும்.
ஜூலை 6, 2014
எங்க காலேஜ் ஓல்ட் ஸ்டுடென்ட் சந்திப்புக்கு சென்னை போயிட்டு இன்னைக்கு காலைலதான் வந்தேன். நேத்தும், முந்தா நேத்தும் டைரி எழுதல. ரெண்டையும் சேத்து இன்னைக்கே எழுதிருவோம். ரொம்ப முக்கியம்!
முந்தா நேத்து பஸ்சுல போகும்போது, அனன்யாவுக்கு சென்னைல கெடச்ச மாதிரி எனக்கும் அங்க ஒரு ஷர்வானந்த் கிடைப்பான்னு நைட்டெல்லாம் கனவு.. 'ஒவ்வொரு இடத்துக்கும் என்னக் கூட்டிட்டுப் போறான். நான் கடைசிவர சந்தேகத்தோடயே அவனப் பாக்கறேன். அப்படியே எங்கேயும் எப்போதும் மூவி கனவுக்குள்ள ஓடீட்டு இருந்துச்சு. ச்சே முன்னாலேயே சென்னைக்கு வந்திருந்தா எப்பவே எனக்கு கல்யாணம் ஆயிருக்கும்
காலைல கோயம்பேடு பஸ்ஸ்டாண்டல எறங்கி அரைமணிநேரம் நின்னுருப்பேன். நின்னு நின்னு காலு வலிச்சதுதான் மிச்சம். டீசண்டான ஒரு பையன்கூட சிக்கல, அதான் என்ன மைண்ட் பண்ணல. எங்க எல்லாம் சோடியாத்தான திரியுதுங்க. சோடி இல்லாம இருக்கறதுங்க ஒரு கையில பீடியும், இன்னொரு கைல அழுக்கு லுங்கிய தொடைக்கு மேல தூக்கிப் பிடிச்சுட்டும் நிக்குதுங்க.
சந்திப்புல, இவளுங்க அலப்பர தாங்க முடியல. ஒருதடவ இன்ட்ரட்யூஸ் பண்ணுனா பத்தாதா, போகும்போது வரும்போதெல்லாம் இதுதான் என் ஹஸ்பண்ட், இதுதான் என் ஹஸ்பண்ட்ன்னு பத்து பதனஞ்சு வாட்டி சொல்லியிருப்பாளுங்க. நல்லவேள எனக்கு கம்பெனிக்கு நாலஞ்சு பொண்ணுக இன்னும் கல்யாணம் ஆகாம இருந்தாளுங்க. அதுல வலிக்காத மாதிரி நடிச்சதுல என்னோடதுதான் பெஸ்ட் பெர்பாஃமன்ஸ்.
ஜூலை 23, 2014
இந்த ஃபேஸ்புக்ல இருக்கற ஆம்பளைங்க அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்களே.
மரியாதை, அன்பு, பாசம், அடக்கம், பெண்களை மதித்தல், முற்போக்கு சிந்தனை, பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தல் எட்சட்ரா, எட்சட்ரா இப்படி எல்லாமே இவங்ககிட்ட அதிகமா இருக்குது. இவங்களப் பாக்கும்போதெல்லாம், மீனப் புடிக்க கரைல பவ்யமா நின்னுட்டு இருக்குமே கொக்கு. அதுதான் ஞாபகத்துக்கு வந்து தொலையுது. ஆனா ஒன்னு, இவங்க எல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி கொஞ்சம் கொஞ்சமா என்ன ஃபேஸ்புக்ல புரட்சிப் பொண்ணா நிரந்தரமா நடிக்க விட்டுட்டாங்க.
இதுல ஃபேஸ்புக் மன்மதக் குஞ்சு ஒன்னு இருக்குது. அவன் போடற போஸ்டுகளப் படிச்சா, ஹ்ரித்திக் ரோஷனுக்கு அப்புறம் இவர் பின்னாடிதான் பொண்ணுங்க க்யூல நிக்கறாங்கங்கற மாதிரி இருக்கும். பொண்ணுங்கள கரெக்ட் பண்ண இது ஒருவகையான டேக்டிக்ஸாம்.
ஜூலை 25, 2014
இன்னைக்கு ஃப்ரைடே. காலைல அம்மாகூட கோயிலுக்குப் போனேன். ஐயர் சும்மா இருக்காம அம்மாட்ட, 1008 வாட்டி ஸ்ரீராம ஜெயம் எழுதச் சொல்லுங்கோன்னு சொல்ல. அது ஒண்ணுதான் கொறங்கற மாதிரி வீட்டுக்கு வந்ததுல இருந்து சும்மா நை நைன்னுட்டு எழுத வெச்சிருச்சு.
இந்தக் கடவுள்களெல்லாம் ஏன்தான் இப்படி லடைட்டா இருக்காங்களோ? Luddite - அப்பறமா ஸ்பெல்லிங் மறந்துருவேன். ஃபேஸ்புக் பீட்டர் ஒன்னு இந்த வார்த்தைய சொல்லிக் குடுத்துச்சு. புது டெக்னாலஜிய புடிக்காம ஏத்துக்காம இருக்கறவங்களாம்.
எக்ஸல்ல =REPT("ஸ்ரீராம ஜெயம் ",1008) இப்படிப்போட்ட ஆயிரத்தெட்டு வாட்டி வரப்போகுது. அத அப்புறமா வேர்ட்ல காப்பி பண்ணி ப்ரிண்ட் எடுத்தா எவ்வளவு நீட்டா அழகா இருக்கும். ப்ராடக்டப் பாக்காம ப்ராசெஸ்ஸப் பாக்கறதே பொழப்பாப் போச்சு இந்தக் கடவுளுக்கு. ப்ராடக்டப் பாக்கற ஆளா இருந்தா, எனக்கு சட்டுபுட்டுன்னு ஷாட்கட்ல ஒரு ப்ராடக்ட்ட இந்நேரம் காமிச்சருக்கணுமே.
ஜூலை 30, 2014
சிலர்ட்ட இருந்து ஃபோன் வந்தா நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, இப்பெல்லாம் யார் ஃபோன் பண்ணுனாலும் வெறுப்பா இருக்கு. கல்யாணம் ஆயி புள்ள குட்டிங்களோட இருக்கற ஃப்ரெண்டுக ஃபோன் பண்ணி, புருஷன் இப்படி பண்றார், கொழந்த இப்படி பண்ணுதுன்னு எல்லாம் சொல்லும்போது என்ன வெறுப்பேத்த சொல்ற மாதிரியே இருக்குது. அதுல கடசியா ஒரு கேள்வி கேப்பாளுங்களே "இன்னும் மாப்பிள கெடைக்கலியான்னு' அப்படியே வெந்த புண்ணுல வேலப் பாச்சுன மாதிரி இருக்கும். மாப்பிள கெடச்சிருந்தா சொல்லமாட்டாங்களா?
இதுல இவளுங்க ஃபேஸ்புக்ல குடும்ப ஃபோட்டோ போடும்போது கரெக்டா என்ன டேக் வேற பண்ணிவிட்றாளுங்க.
ஆகஸ்ட் 15, 2014
மூட்அவுட். சீரியசா எழுதப் போறேன். இன்னைக்கு சுதந்திரதினம். எனக்கும் இன்னைக்கு எப்படியாவது சுதந்திரம் கெடச்சிரும்ன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஏன்னா, மாப்பிள்ள போட்டோல பாத்தப்பவே எனக்கு பிடிச்சிருந்துச்சு. அந்தப் பையனுக்கும் என்னப் பிடிச்சிருந்ததாலதான் இன்னைக்கு பொண்ணு பாக்க வந்தாங்க.
எல்லாம் ஓகேதான், ஒரு விஷயம் மட்டும்தான். பையனுக்கு டெல்லில வேலை. அவங்க வீடு இங்க திருச்சிலதான் இருக்கு. அவங்க அம்மா கொஞ்சம்(!) முடியாதவங்களாம். படுத்த படுக்கையா இருக்காங்களாம். கல்யாணத்துக்கு அப்புறம் நான்தான் அவங்களுக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். என்னத்த ஒத்தாசை? இவங்க பொண்ணு பாக்க வரல, ஃப்ரீயா ஒரு நர்ஸ் கெடைப்பாளான்னு பாக்க வந்திருக்காங்க.
அத்தன பேர் முன்னாடியும் முகத்துல அடிச்சமாதிரி சொன்னேன், என்னால முடியாது உங்களுக்கு தேவை பொண்ணு இல்ல ஒரு நர்ஸ். நீங்க வேற ஆளப் பாத்துக்கோங்க. எல்லோரும் என்னடா இவ இப்படி பேசறாளேன்னு நெனச்சிருப்பாங்க. அவங்க கொஞ்சம் என்னோட சைட்ல இருந்து யோசிச்சுப் பார்த்தா நான் சொன்னது சரின்னுபடும்.
நாட்கள் கரையக் கரைய, என்னோட டிமான்ட்களைக் குறைத்துக் கொண்டே வருகிறேன். இது எங்கபோய் முடியுமோ?
ஏதோ ஒரு பக்கத்தில் இருந்த பின்குறிப்பு:
இந்த டைரியின் பக்கங்கள் பேனா மையால் நனைந்து கொண்டிருப்பதைவிட அதிகமாக, என்னுடைய கண்ணீரால்தான் நனைந்து கொண்டிருக்கிறது