Tuesday, August 12, 2014

கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் பெண்ணின் டைரியிலிருந்து சில பக்கங்கள்


ஜூன் 4, 2014

இன்னைக்கு பொண்ணு பாக்க வந்த பையனை எனக்கு சுத்தமா புடிக்கல. ரெண்டு பேருக்கும் பொருத்தமே இல்ல. ஐயோ, இந்தப் பையனைப் போய் 'கட்டிக்கோ கட்டிக்கோ'ன்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்களே அப்பாவும் அம்மாவும். எப்படியாவது எவன் தலையிலயாவது கட்டி வெச்சு, அவங்க தலைல இருக்கற பாரத்த இறக்கி வெச்ச்ச்ச்சறணும். அப்பாங்களுக்கு பெண் குழந்தைகளை உண்மைல புடிக்குதா இல்லையாங்கறது கல்யாணம் ஆகாமல் பொண்ணுங்க வீட்டுல இருக்கும்போதுதான் தெரியும்.

ஜூலை 6, 2014

எங்க காலேஜ் ஓல்ட் ஸ்டுடென்ட் சந்திப்புக்கு சென்னை போயிட்டு இன்னைக்கு காலைலதான் வந்தேன். நேத்தும், முந்தா நேத்தும் டைரி எழுதல. ரெண்டையும் சேத்து இன்னைக்கே எழுதிருவோம். ரொம்ப முக்கியம்!

முந்தா நேத்து பஸ்சுல போகும்போது, அனன்யாவுக்கு சென்னைல கெடச்ச மாதிரி எனக்கும் அங்க ஒரு ஷர்வானந்த் கிடைப்பான்னு நைட்டெல்லாம் கனவு.. 'ஒவ்வொரு இடத்துக்கும் என்னக் கூட்டிட்டுப் போறான். நான் கடைசிவர சந்தேகத்தோடயே அவனப் பாக்கறேன். அப்படியே எங்கேயும் எப்போதும் மூவி கனவுக்குள்ள ஓடீட்டு இருந்துச்சு. ச்சே முன்னாலேயே சென்னைக்கு வந்திருந்தா எப்பவே எனக்கு கல்யாணம் ஆயிருக்கும்

காலைல கோயம்பேடு பஸ்ஸ்டாண்டல எறங்கி அரைமணிநேரம் நின்னுருப்பேன். நின்னு நின்னு காலு வலிச்சதுதான் மிச்சம். டீசண்டான ஒரு பையன்கூட சிக்கல, அதான் என்ன மைண்ட் பண்ணல. எங்க எல்லாம் சோடியாத்தான திரியுதுங்க. சோடி இல்லாம இருக்கறதுங்க ஒரு கையில பீடியும், இன்னொரு கைல அழுக்கு லுங்கிய தொடைக்கு மேல தூக்கிப் பிடிச்சுட்டும் நிக்குதுங்க.

சந்திப்புல, இவளுங்க அலப்பர தாங்க முடியல. ஒருதடவ இன்ட்ரட்யூஸ் பண்ணுனா பத்தாதா, போகும்போது வரும்போதெல்லாம் இதுதான் என் ஹஸ்பண்ட், இதுதான் என் ஹஸ்பண்ட்ன்னு பத்து பதனஞ்சு வாட்டி சொல்லியிருப்பாளுங்க. நல்லவேள எனக்கு கம்பெனிக்கு நாலஞ்சு பொண்ணுக இன்னும் கல்யாணம் ஆகாம இருந்தாளுங்க. அதுல வலிக்காத மாதிரி நடிச்சதுல என்னோடதுதான் பெஸ்ட் பெர்பாஃமன்ஸ்.

ஜூலை 23, 2014

இந்த ஃபேஸ்புக்ல இருக்கற ஆம்பளைங்க அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்களே.

மரியாதை, அன்பு, பாசம், அடக்கம், பெண்களை மதித்தல், முற்போக்கு சிந்தனை, பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தல் எட்சட்ரா, எட்சட்ரா இப்படி எல்லாமே இவங்ககிட்ட அதிகமா இருக்குது. இவங்களப் பாக்கும்போதெல்லாம், மீனப் புடிக்க கரைல பவ்யமா நின்னுட்டு இருக்குமே கொக்கு. அதுதான் ஞாபகத்துக்கு வந்து தொலையுது. ஆனா ஒன்னு, இவங்க எல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி கொஞ்சம் கொஞ்சமா என்ன ஃபேஸ்புக்ல புரட்சிப் பொண்ணா நிரந்தரமா நடிக்க விட்டுட்டாங்க.

இதுல ஃபேஸ்புக் மன்மதக் குஞ்சு ஒன்னு இருக்குது. அவன் போடற போஸ்டுகளப் படிச்சா, ஹ்ரித்திக் ரோஷனுக்கு அப்புறம் இவர் பின்னாடிதான் பொண்ணுங்க க்யூல நிக்கறாங்கங்கற மாதிரி இருக்கும். பொண்ணுங்கள கரெக்ட் பண்ண இது ஒருவகையான டேக்டிக்ஸாம்.

ஜூலை 25, 2014

இன்னைக்கு ஃப்ரைடே. காலைல அம்மாகூட கோயிலுக்குப் போனேன். ஐயர் சும்மா இருக்காம அம்மாட்ட, 1008 வாட்டி ஸ்ரீராம ஜெயம் எழுதச் சொல்லுங்கோன்னு சொல்ல. அது ஒண்ணுதான் கொறங்கற மாதிரி வீட்டுக்கு வந்ததுல இருந்து சும்மா நை நைன்னுட்டு எழுத வெச்சிருச்சு.

இந்தக் கடவுள்களெல்லாம் ஏன்தான் இப்படி லடைட்டா இருக்காங்களோ? Luddite - அப்பறமா ஸ்பெல்லிங் மறந்துருவேன். ஃபேஸ்புக் பீட்டர் ஒன்னு இந்த வார்த்தைய சொல்லிக் குடுத்துச்சு. புது டெக்னாலஜிய புடிக்காம ஏத்துக்காம இருக்கறவங்களாம்.

எக்ஸல்ல =REPT("ஸ்ரீராம ஜெயம் ",1008) இப்படிப்போட்ட ஆயிரத்தெட்டு வாட்டி வரப்போகுது. அத அப்புறமா வேர்ட்ல காப்பி பண்ணி ப்ரிண்ட் எடுத்தா எவ்வளவு நீட்டா அழகா இருக்கும். ப்ராடக்டப் பாக்காம ப்ராசெஸ்ஸப் பாக்கறதே பொழப்பாப் போச்சு இந்தக் கடவுளுக்கு. ப்ராடக்டப் பாக்கற ஆளா இருந்தா, எனக்கு சட்டுபுட்டுன்னு ஷாட்கட்ல ஒரு ப்ராடக்ட்ட இந்நேரம் காமிச்சருக்கணுமே.

ஜூலை 30, 2014

சிலர்ட்ட இருந்து ஃபோன் வந்தா நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, இப்பெல்லாம் யார் ஃபோன் பண்ணுனாலும் வெறுப்பா இருக்கு. கல்யாணம் ஆயி புள்ள குட்டிங்களோட இருக்கற ஃப்ரெண்டுக ஃபோன் பண்ணி, புருஷன் இப்படி பண்றார், கொழந்த இப்படி பண்ணுதுன்னு எல்லாம் சொல்லும்போது என்ன வெறுப்பேத்த சொல்ற மாதிரியே இருக்குது. அதுல கடசியா ஒரு கேள்வி கேப்பாளுங்களே "இன்னும் மாப்பிள கெடைக்கலியான்னு' அப்படியே வெந்த புண்ணுல வேலப் பாச்சுன மாதிரி இருக்கும். மாப்பிள கெடச்சிருந்தா சொல்லமாட்டாங்களா?

இதுல இவளுங்க ஃபேஸ்புக்ல குடும்ப ஃபோட்டோ போடும்போது கரெக்டா என்ன டேக் வேற பண்ணிவிட்றாளுங்க.

ஆகஸ்ட் 15, 2014

மூட்அவுட். சீரியசா எழுதப் போறேன். இன்னைக்கு சுதந்திரதினம். எனக்கும் இன்னைக்கு எப்படியாவது சுதந்திரம் கெடச்சிரும்ன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஏன்னா, மாப்பிள்ள போட்டோல பாத்தப்பவே எனக்கு பிடிச்சிருந்துச்சு. அந்தப் பையனுக்கும் என்னப் பிடிச்சிருந்ததாலதான் இன்னைக்கு பொண்ணு பாக்க வந்தாங்க.

எல்லாம் ஓகேதான், ஒரு விஷயம் மட்டும்தான். பையனுக்கு டெல்லில வேலை. அவங்க வீடு இங்க திருச்சிலதான் இருக்கு. அவங்க அம்மா கொஞ்சம்(!) முடியாதவங்களாம். படுத்த படுக்கையா இருக்காங்களாம். கல்யாணத்துக்கு அப்புறம் நான்தான் அவங்களுக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். என்னத்த ஒத்தாசை? இவங்க பொண்ணு பாக்க வரல, ஃப்ரீயா ஒரு நர்ஸ் கெடைப்பாளான்னு பாக்க வந்திருக்காங்க.

அத்தன பேர் முன்னாடியும் முகத்துல அடிச்சமாதிரி சொன்னேன், என்னால முடியாது உங்களுக்கு தேவை பொண்ணு இல்ல ஒரு நர்ஸ். நீங்க வேற ஆளப் பாத்துக்கோங்க. எல்லோரும் என்னடா இவ இப்படி பேசறாளேன்னு நெனச்சிருப்பாங்க. அவங்க கொஞ்சம் என்னோட சைட்ல இருந்து யோசிச்சுப் பார்த்தா நான் சொன்னது சரின்னுபடும்.

நாட்கள் கரையக் கரைய, என்னோட டிமான்ட்களைக் குறைத்துக் கொண்டே வருகிறேன். இது எங்கபோய் முடியுமோ?

ஏதோ ஒரு பக்கத்தில் இருந்த பின்குறிப்பு:

இந்த டைரியின் பக்கங்கள் பேனா மையால் நனைந்து கொண்டிருப்பதைவிட அதிகமாக, என்னுடைய கண்ணீரால்தான் நனைந்து கொண்டிருக்கிறது

முத்தம் - மீண்டும் ஒரு காதல்

துபாயில் ஒலிக்கும் ஒரே தமிழ் எஃப்எம்மைக் கேட்டுக் கேட்டு போர் அடித்துவிட்டதால், மலையாளம் ரேடியோ சேனல்களைக் கேட்பதை பழக்கப்படுத்திக் கொண்டேன். அவற்றிலும் பெரும்பாலும் தமிழ் பாடல்கள் ஒலிக்கும்.

அன்றும் அப்படித்தான், "அடுத்து வரும் பாடல் அலைபாயுதே படத்திலிருந்து, ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே" என்றார் வர்ணனையாளர். அந்தப் பாடலைக் கேட்டிருப்பது அனிதா என்றவுடன் மனது எங்கேயோ சென்று விட்டது.

அனிதா என்ற பெயருடைய மலையாளிகள் பலர் இருக்கிறார்கள். இந்தப் பாடலும் அப்படித்தான் பெரும்பாலோனோரால் விரும்பப்படும் பாடல். அந்த அனிதாவாக இருக்காது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு மீட்டிங்கில் இருந்தபோது ஒரு புது நம்பரில் இருந்து ஃபோன். பெரும்பாலும் இப்படி வரும் ஃபோன்கால்கள் ஏதாவது பேங்கிலிருந்து வரும் என்பதால் அழைப்பைத் துண்டித்தேன். மீண்டும் மீண்டும் கால் வரவே, எடுத்து டேபிலுக்கு கீழே குனிந்தவாறே, "ஐ'யம் இன் எ மீட்டிங், கால் மீ ஆஃப்டர் சம்டைம்" என்று சொல்லி எதிர்முனையிலிருந்து பதில் வரும் முன்னே ஃபோனை கட் பண்ணினேன்.

மதியம் மீண்டும் அதே நம்பரில் இருந்து கால் வந்தது. (இந்நேரம் அது அனிதாவின் கால்தான் என்று நீங்கள் யூகித்திருப்பீர்கள், ஆனால் அன்று அது அனிதாவின் நம்பராக இருக்கும் என்று எனக்கு தோணவே இல்லை).

"ஹலோ"

"ஐ டோன்ட் நீட் எனி ஃபினான்ஷியல் அசிஸ்டன்ஸ்"

"ஞான் அனிதயானு"

என் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது

"ஹான்.. பற.. சுகமானோ"

"என்ன ஓர்மயுண்டல்லே, பாக்யம்"

(இனி வருவது அதற்குப் பிறகு நடந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு)

"எப்படி என் நம்பர் கெடச்சது"

"இது பெரிய விஷயமா, உன் பேஸ்பபுக் அக்கௌன்ட்ல உன்னோட வெப்சைட் லிங்க் இருக்கே. வெப்சைட்லதான் உன்னோட அட்ரஸ்ஸை வெலாவாரியா போட்டிருக்கியே"

"க்லவர்..இங்க எப்ப வந்த?"

"ஒரு வாரம் ஆச்சு"

"ஹஸ்பண்ட் விசால வந்துருக்கியா?"

"இல்ல, டூரிஸ்ட் விசா, ரெண்டு மாசத்துக்கு"

"குழந்தை"

"ஹ்ம், ரெண்டு பேரும்தான் வந்திருக்கோம். நீ எப்படி இருக்க?"

"குட்"

"உன்னப் பாக்கணுமே, இன்னைக்கு ஈவ்னிங் பாக்கமுடியுமா?"

"எனக்கு ஆஃபிஸ் ஆறு மணிக்குத்தான் முடியும். நீ எங்க தங்கிருக்க?"

"கராமா. லூலு செண்டருக்கு பேக்ல"

"ஹஸ்பண்ட் எத்தன மணிக்கு வருவார்?. அவர் வந்ததுக்கு அப்புறம் வர்றேன்"

"அவர் வர லேட் ஆகும். ஸபீல் பார்க்குக்கு வா. அங்க மீட் பண்ணலாம்"

"ஏன்"

"வா, என்ன ஆச்சு?"
"சரி. ஆறரைக்கு அங்க இருப்பேன். கேட்-1. ஓகேவா?"

"சரி. அப்படின்னா ஈவ்னிங் பாப்போம். பை"

'கொஞ்சம் சீக்கிரமே வீட்டுக்குப் போய் மனைவியையும் குழந்தைகளையும் கூட்டிட்டு போலாமா?'. 'ஒருவேளை புடிக்கலன்னா' இப்படியான எண்ணங்கள் மனதில் ஓடின. கடைசியில் வீட்டில் சொல்லவேண்டாம், தனியாகவே போயிட்டு வரலாம் என்று முடிவு பண்ணினேன்.

ஆறு இருபதுக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டேன்; எனக்கு முன்பே அங்கு வந்திருந்த அனிதா, நான் காரிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து என்னை நோக்கி வந்தார்.
"ஆள் டோட்டலா மாறீட்டயே"

லேசாக சிரித்துவிட்டு, "உன் குழந்தையக் கொண்டு வரலியா" என்றேன்.

"இல்ல, அவன பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன்"

"உனக்கு எப்படி இந்த பார்க் தெரியும்"

"இதுக்கு முன்னாடி அவர்கூட ரெண்டு தடவ வந்திருக்கேன். பக்கம்தான. டேக்சில அஞ்சு நிமிஷம்தான்"

"ஹ்ம்"

"வா உள்ள போய் எங்கயாவது உக்காருவோம்"

ஒரு மரத்திற்கு அருகே அமர்ந்தோம். கோடைகாலம் என்பதால் ஏழு மணிவரை நல்ல வெளிச்சம் இருக்கும்.
"மலையாளம் இன்னும் மறக்கலியா"

இல்லை என்பதுபோல தலையாட்டினேன்

"என்னத்தான் மறந்துட்ட"

"அனிதா, எல்லாம் முடிஞ்சு போச்சு. நாம இனி அதப் பத்தி பேசறதும் நினைக்கறதும் தப்பு"

"உனக்கு வேணும்னா, அது ஒரு வெளையாட்டா இருக்கும். நீ கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்தான் நான் கல்யாணம் பண்ணினேன். அந்த ரெண்டு வருஷம் நான் அனுபவிச்ச வேதனையெல்லாம் உனக்குத் தெரியாது"

"இப்ப அதப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது"

"என் மனசுல உள்ளதெல்லாம் வெளிய கொட்டணும்"

"எத்தனையோ முறை கொட்டியாச்சு.. இன்னும் என்ன?"

"சரி, விடு.. நீ சந்தோஷமா இருக்கியா"

"ம்"

"இல்ல, உன்னப் பாத்தா அப்படி தெரியல. ஸ்பீக் அவுட். ஏதா இருந்தாலும் சொல்லு"

"இல்ல.ஐ'யம் சோ ஹாப்பி"

"ஐ டோன்ட் திங் சோ"

"நோ, ஐ'யம்"

சிறிது மவுனத்திற்குப் பிறகு,

"நாம கடசியா மீட் பண்ணுனது எப்பன்னு ஞாபகம் இருக்கா?"

"என் கல்யாணம் முடிஞ்சு உங்க வீட்டுக்கு வந்தப்ப"

"அதுல்ல, தனியா மீட் பண்ணுனது"

"கோயம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன்"

"எங்கயுமே தனியா போகாத நான் உன்னப் பாக்க தொடர்ந்து ரெண்டு நாள் தனியா ட்ரைன்ல வந்தேன். நீ துபாய் கெளம்பறதுக்கு முன்னாடி"

"இட்ஸ் கெட்டிங் லேட். ஐ ஹேவ் டு லீவ் நவ்"

"உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா"

"பட், நாம அத மறக்கணும்"

"இந்த ஏழு வருஷத்துல என்னைக்காவது என்னோட ஞாபகம் வந்திருக்கா?"

"அனிதா, வாட் ஈஸ் திஸ்? லெட்ஸ் மூவ் ஆன்"

"உன்கூட பேசறதுக்கு முன்னால.... மை லைஃப் வாஸ் குட் பட் நவ்"

"வாட் டூ யூ மீன்?"

"பிகாஸ் யூ ஆர் அவாய்டிங் மீ. நீ மாறல."

"இல்ல அனிதா. ட்ரை டு அண்டர்ஸ்டேண்ட்"

"உனக்குத் தெரியுமா.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு காமிக்க நெனச்சேன். நீ என்னப் பாத்து பொறாமப் படணும்னெல்லாம் நெனச்சிருந்தேன். பட், யூ கீப் ஆன் அவாய்டிங் மீ"

"நான் எங்க உன்ன அவாய்ட் பண்றேன். நீ கூப்புட்ட உடனே வந்தேன் இல்லியா"

"பொய் சொல்லாத, நீ எப்படி படபடன்னு பேசுவே. இப்ப ஒரு வார்த்த பேச எவ்வளவு யோசிக்கற"

"அனிதா, ஐ திங் யூ ஆர் டிஸ்டர்ப்ட்"

"நோ. ஐ'யம் நாட். பட் யு ஆர் ஹர்ட்டிங் மீ"

"இதுக்குத்தான் உங்க ஹஸ்பண்ட் இருக்கறப்ப மீட் பண்ணலாம்ன்னு சொன்னேன்."

அனிதா ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார்.

"அனிதா, டைம் ஆச்சு நான் கெளம்பறேன்"

"போறியா, ஷேல் ஐ ஆஸ்க் யூ சம்திங்?"

"வாட்"

"நீ... நீ எனக்கு.. எனக்கு ஒரு... வில் யூ கிஸ் மீ?"

"இல்ல. ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட் யுவர் பீலிங்க்ஸ். பட், இது சரியா வராது. நம்ம ரெண்டு பேரோட லைஃபும் சந்தோஷமா போயிட்டு இருக்கு. கண்டிப்பா ரெண்டு பேரும் அப்பறமா ஃபீல் பண்ணுவோம்"

"என்னால முடியல"

"நான் கெளம்பறேன். இனி இங்க இருந்தா சரியா வராது. பை"

"ப்ளீஸ் போகாத"

அங்கிருந்து எழுந்து நடந்து பாதி தூரம் சென்று திரும்பி அனிதாவைப் பார்த்து, "இனி எனக்கு ஃபோன் பண்ணாத. பண்ணுனாலும் நான் எடுக்கமாட்டேன்?. குட்பை.. அப்புறம்... ஒரு விஷயம்.... ஐ லவ் யூ" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தேன்.

காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிய சிறிது நேரத்தில் ஃபோன் ரிங் அடித்தது, ஃபோன் பின் சீட்டில், பேகில் இருந்தது. யார் என்று பார்க்காமல் ஸ்டீரிங்கில் இருந்த ப்ளூடூத் பட்டனை அமர்த்தி கால் அட்டென்ட் பண்ணினேன்.

"அப்பா, நான்... ஸ்கூல்ல... யாருக்குமே மிஸ் போடல. எனக்கு மட்டும் த்ரீ ஸ்டார் போட்டாங்களே.. மாலுக்கு கூட்டிட்டுப் போங்க. எனக்கு நீங்க பார்பி டால் வாங்கிக் குடுங்க."

"வெரி குட்... குட் கேள்.. அப்பா வந்து வாங்கித்தரேன்"

"அப்பா, உம்மா குடுக்கல"

"ம்ப்ச்ச்ச்"

பெண்ணாய் பிறந்திட....

இந்த எட்டு மாதத்தில் இதுதான் முதன்முறையாக தனியாக நடப்பது. மார்னிங் ஷிப்ட் ஈவ்னிங் ஷிப்ட் என்று ஒவ்வொரு வாரமும் மாறிமாறி வருவதால், மார்னிங் ஷிப்ட் உள்ளபோது மட்டும்தான் அவருடன் நடக்க வருவேன்.

அவர் தினமும் நடக்க செல்வார். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் க்யூஎ/க்யூசி மேனேஜராக வேலை செய்கிறார். பொதுவாக ஆறு மணிக்கெல்லாம் அவருக்கு வேலை முடிந்துவிடும். நாளை இந்தியா செல்வதால், இன்று சில வேலைகளை முடிக்கவேண்டிய கட்டாயம். எப்படியும் வீட்டிற்கு வர பத்து மணி ஆகிவிடும் என்றார்.

இந்தியா கொண்டு செல்லவேண்டிய பொருட்களை எல்லாம் ஏற்கனவே பேக் செய்துவிட்டோம். வேற வேலை ஒன்றும் இல்லாததால், தனியாக இருப்பதுபோல் ஒரு எண்ணம். நடக்கலாம் என்று முடிவோடு, நாங்கள் தங்கியிருந்த அல்-குவைர் ஏரியாவில் சுல்தான் காபூஸ் ஸ்ட்ரீட் ஓரத்தில் உள்ள நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன்.

அம்மா தனியாக இருக்கிறார் என்பதை உணர்ந்திருந்தாலும், தனிமை என்பது எவ்வளவு பெரிய வேதனை என்பதை இன்றுதான் முழுவதுமாக உணரமுடிந்தது. எட்டு மாதங்களுக்கு முன் நாங்கள் ஒமான் வந்தபொழுது அம்மாவின் கண்களில் கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. பத்து வருடங்களுக்கு முன்பு அப்பா இறந்தபொழுதுதான் அம்மா கடைசியாக அப்படி அழுதது.

ஒமான் வந்தபிறகு, இந்த எட்டு மாதம் போனதே தெரியவில்லை. முதல் பத்து நாட்கள் அம்மாவின் நியாபகம் வந்திருந்தாலும், அதற்குப் பிறகு மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த்தில் லைசன்ஸ் வாங்க, வேலைக்கு அப்ளை செய்வது என்று பிசியாக இருந்ததால் அம்மாவின் தனிமையைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

அப்பா இறப்பதற்கு முன்னும், பின்னும் அம்மாதான் எனக்கு எல்லாம், என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட், ரோல் மாடெல், ஃபிளாஸஃபர் எல்லாமே அம்மாதான். எப்போதும் நமக்கு நல்லதே நினைக்கும் அம்மாவை பெஸ்ட் ஃப்ரெண்ட்டாக கிடைப்பது என்பது பாக்கியம்.

அப்பா இறந்த பிறகும் சொந்தக் காலில்தான் நிற்கவேண்டும் என்ற கொள்கையோடு இன்றுவரை வாழ்ந்து வருகிறார். அம்மாவின் குடும்ப சொத்துக்கள், அப்பாவின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிசிபி பேங்கில் சீனியர் மேனேஜராக இருக்கிறார்.

அம்மா மற்றவர்களுக்கு உதவி செய்வது யாருக்கும் தெரியாது. என்னிடம்கூட சொல்லமாட்டார். நன்றி கடிதங்கள் வரும்போதுதான், அம்மா உதவி செய்துள்ளது எனக்குத் தெரியும்.

போன வாரமே, அம்மாவிற்கு ஒரு சால்வையும், செயினும், ஐஃபோனும் வாங்கி வைத்துள்ளேன். அம்மாவிற்கு நான் என்ன வாங்கிக் கொடுத்தாலும் சந்தோசம்தான். அம்மாவை எங்களுடன் இங்கே வந்துவிடச் சொன்னோம். அம்மா மறுத்துவிட்டார்.

அம்மாவை இந்தமுறை எப்படியும் விஆர்எஸ் வாங்கிவிடச் சொல்லவேண்டும். திரும்பி வருவதற்கு முன், வீட்டு வேலைக்கு ஒரு ஆள் வைத்துவிட்டுத்தான் வரவேண்டும் என்ற முடிவோடு இருந்தேன்.
---

வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்துவிட்டோம். அந்த நேரத்தில் திருச்சிக்கு ஃப்ளைட் இல்லாததால், அவரது கம்பெனியின் சென்னை ப்ராஞ்ச் திருச்சி செல்ல கார் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய வீடு ஸ்ரீரங்கத்தில், எங்களது வீடு இருப்பதோ கேகே நகர். காலையில் அவர் வீட்டிற்கு சென்று மதியம்போல அம்மாவைப் பார்க்க செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

திருச்சி நெருங்கியபோது, அவர் டிரைவரிடம் கேகே நகர் செல்ல வழி சொன்னார்.

'அத்தையைப் பாத்துட்டு அப்புறமா வீட்டுக்கு போலாம்' என்றார்.

கண்ணீரை அடக்கமுடியாமல் சரி என்று தலையாட்டினேன்.
காலிங் பெல் அடித்தபோது, கதவை திறந்தது அம்மா இல்லை. ஒரு சிறுமி 'வாங்க சார், வாங்க அக்கா' என்று சொல்ல, சோஃபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மேலும் இரண்டு சிறுமிகள் ஓடிவந்து 'வாங்க' என்றனர் சந்தோஷத்தோடு.

'அம்மா, அக்காவும் சாரும் வந்துட்டாங்க' என்று அவர்கள் சத்தம்போட கிச்சனில் இருந்து வேகமாக ஹாலிற்கு வந்தார் அம்மா.

'வாங்க தம்பி, உக்காருங்க' என்று அம்மா சொல்லிமுடிப்பதற்குள் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

'இன்னைக்கு லீவ் எடுத்திருக்கேன். நானே மத்தியானம் வாக்குல ஸ்ரீரங்கம் வரலாம்ன்னு இருந்தேன் தம்பி' என்றார் அவரிடம்.

'இல்ல. அத்த உங்கள ஒரெட்டு பாத்துட்டு போயிருவோம்ன்னுதான்'

அதற்குள் 'அம்மா, யாரும்மா இவங்க?' என்றேன்

'நீங்க போய் ஒரு மாசத்துல, சின்னதா ஒரு குழந்தைகள் காப்பகம் நடத்த லைசன்ஸ் வாங்கிட்டேன். இப்ப மூணு பேர் இருக்காங்க. அடுத்த மாசம் இன்னும் மூணு பேர் வருவாங்க'

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
'போய், குளிச்சிட்டு வாங்க தம்பி. டிஃபன் செய்யறேன்' என்றார் அம்மா.

'வேண்டாம்மா, அங்க எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்காங்க. நான் குளிக்காம எதுவும் சாப்பிட மாட்டேன் இல்லியா. அவருக்கு மட்டும் டி போடுங்க. குடிச்சிட்டு கெளம்பறோம்' என்றேன்.

அம்மா டி போட கிச்சனுக்கு செல்ல, குழந்தைகளிடம் பேரைக் கேட்டேன்.

'உமா', 'ஜானகி', 'சத்யா" என்றனர் ஒவ்வொருவராக

'நான் யாருன்னு தெரியுமா?''

'கமலி அக்கா, வெளி நாட்டுல டாக்டரா இருக்கீங்க'

'ம்ம்ம்'

நாங்களும் படிச்சு உங்கள மாதிரியே டாக்டர் ஆயி, காசு இல்லாதவங்களுக்கு சும்மா மருந்து கொடுப்போம்'