Saturday, September 14, 2013

லலிதா- நீ மட்டும் போதும்....

'யாருன்னு தெரியலியே, 10 மிஸ்ட் கால் வந்திருக்கே' என்று நினைத்துக்கொண்டே பார்த்தால், அப்பாதான் பண்ணியிருக்கிறார்.

'என்ன பிரச்சனைன்னு தெரியலியே, இத்தனை வாட்டி கூப்பிட மாட்டாரே' என்று எண்ணிக்கொண்டே அப்பாவை அழைத்தேன்.

'அப்பா, கூப்பிட்டிருந்தீங்களா'

'ஆமாம்மா, குழந்தைக நல்லா இருங்காங்கல்ல. தம்பி வேலைக்குப் போயிட்டாரா?'

அப்பா பேசுவதிலேயே எதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டேன்.

'நல்லா இருக்காங்கப்பா, ஸ்கூலுக்கு போயிட்டாங்க. அவரும் வேலைக்குப் போயிட்டார். நீங்க கூப்பிட்டப்ப நான் கிட்சென்ல பாத்திரம் கழுகிட்டு இருந்தேன்ப்பா அதான் கேக்கல. என்னப்பா ஏதாவது பிரச்சனையா'

'ப்ரேமுக்கு கிட்னி பிரச்சனை இருந்துச்சு இல்லியாமா. அது சீரியஸ் ஆயிருச்சு. டாக்டர் உடனே மாத்தி ஆகணும்னு சொல்றாங்க'

'அய்யய்யோ. என்னப்பா சொல்றீங்க? போனவாரம் நல்ல இருக்கான்னு சொன்னீங்களே?' என்றேன் பதறிக்கொண்டு

'தெரியலமா, யூரின் சுத்தமா போகமுடியல. ப்ளட்டா போகுது'

'என்னப்பா பண்றது'

'கிட்னி கெடைக்கலமா. என்னோடதும் அம்மாவோடதும் சேராதாம். அவன் ப்ளட் குரூப் AB நெகடிவ் இல்லியா. அது கெடைக்கறது ரொம்ப கஷ்டமாம்.'

'யாராவது டோனர் இருப்பாங்களேப்பா'

'இருக்காங்கம்மா. ஆனா இது ரேர் குரூப் இல்லியா. கொறஞ்சது பத்து லட்சம் கேக்கறாங்க. அவ்வளவு காசுக்கு எங்கம்மா போவேன்' என்று சொல்லி அழுதார்.

எனது கணவர் இங்கு மத்தியப் பிரதேஷில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவரால் அதிக பட்சம் ஒரு லட்சம் தான் புரட்ட முடியும்.

'என்னப்பா பண்ணலாம்' என்றேன்

'தெரியலமா'

'அப்பா, நான் கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடறேன்' என்று சொல்லிவிட்டு, கணவருக்கு ஃபோன் பண்ணினேன்.

அவரிடம் விஷயத்தை சொன்னேன். எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, 'ஒரு லட்சம் ரூபாய் நம்ம ரெடி பண்ணிரலாம்' என்றார்.

தயங்கிக்கொண்டே அவரிடம், 'ஏங்க, என்னோட கிட்னிய நான் குடுத்தரட்டா. என்னோட ப்ளட் குரூப்பும் AB நெகடிவ் தானங்க ' என்றேன்.

'அது வந்து….' என்று இழுத்தார்.

'சரி, நான் அப்புறம் கூப்பிடறேன்' என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டேன்

இதுவரை நான் மனது கோணும்படி அவர் நடந்து கொண்டதில்லை. நான் சொன்ன விஷயத்திற்காக அவர் யோசித்தது இதுவே முதல்முறை.

பத்து நிமிடத்தில் அவரிடம் இருந்து ஃபோன் வந்தது. 'ப்ரியா, நீ டொனேட் பண்ணிக்க. நீ குடுக்கலன்னா வேற யார் குடுப்பா. நைட் டிக்கெட் புக் பண்ணிருக்கேன். 8 மணிக்கு ட்ரெயின்' என்றார்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உடனடியாக அப்பாவிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. பிறகு சரி என்று சொல்லிவிட்டார்.
---------------------------
சென்னையில் வருண் ஹாஸ்பிடலில் ஓரளவிற்கு கட்டணம் குறைவாக இருக்கும் என்று அவர் சொல்லியிருந்ததால், அங்கேயே சேர்த்தோம்.

குறைந்தது நாலு லட்சம் தேவைப்படும் என்று சொன்னார்கள். அப்பாவிடம் ஒரு லட்சம் இருந்தது. இன்னும் இரண்டு லட்சம் ரங்கசாமி மாமா கடனாக தருவதாக சொல்லியிருந்தார்.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, 'ரெண்டு நாளில் ஆபரேஷன் பண்ணிரலாம், சீஃப் டாக்டர் நாளைக்கு வந்துவிடுவார்' என்று சொன்னார்.

அடுத்த நாள் மாலை நாலு மணிக்கு, 'சீஃப் டாக்டர் ஜெனிஃபர் மேடம் வந்துட்டு இருக்காங்க' என்று சொல்லி ஒரு நர்ஸ் என்னையும் அப்பாவையும் வெளியே அனுப்பிவிட்டார். அம்மா மட்டும் ப்ரேமுடன் இருந்தார்கள்

எல்லா அறைகளும் அமைதியாகிவிட்டன. டாக்டர் தூரத்தில் நடந்து வருவதை பார்த்தேன். மெலிந்த உருவம் பார்ப்பதற்கு நடிகை அமலாவைப் போல் இருந்தார். முகத்தில் கண்ணாடி அணிந்திருந்தார். அருகில் வந்தபோது 'குட் ஈவ்னிங் மேடம்' என்றேன். என்னைத் திரும்பி பார்த்து தலையசைத்தார்.

திரும்பிப் பார்த்தபொழுதுதான் அது லலி என்று தெரிந்தது.

'லலி, எப்படி இருக்கறடீ' என்றேன் அவள் பின்னால் ஓடியவாறு.

அவளும் என்னை அடையாளம் கண்டுவிட்டாள்.

'ப்ரியா, எப்படி இருக்கற? இங்க எப்படி' என்றாள்

விஷயத்தை சொன்னேன்.

அவள் பிறகு வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு போனாள். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பத்து பதினைந்து கால் வந்துவிட்டது, எவ்வளவு பிஸியாக இருக்கிறாள் என்று மலைத்துப் போனேன்.
---------------------------------------
நானும் லலிதாவும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே படித்தோம். என்னுடைய நெருங்கிய தோழி, நெருங்கிய என்பதைவிட வேறு ஏதாவது ஒரு வார்த்தை இருந்தால் அந்த அளவிற்கு பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்.

ஐந்தாம் வகுப்புவரை அப்பா வேலை செய்த பள்ளியில் தான் படித்தோம். அதற்குப் பிறகு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தோம்.

எட்டாம் வகுப்பில் படிக்கும்போது, கிறிஸ்மஸ்ஸிற்கு அவளது வீட்டிற்கு அழைத்து இருந்தாள்.

'இதுவரைக்கும் எங்க வீட்ல நீ சாப்பிட்டதே கெடையாது. இந்த தடவை கண்டிப்பா சாப்படணும'

'இல்லடீ, வர்றேன். ஆனா சாப்பாடெல்லாம் வேணாம்'

'ஏண்டீ, எங்க வீட்ல நீங்க சாப்பிட்டா யாராவது ஏதாவது சொல்லுவாங்களா' என்றாள் பரிதாபமாக

'அய்யயோ, எங்கப்பா மேல சத்தியமா அப்டிலாம் ஒண்ணும் இல்லடி'

அன்று வீட்ற்கு சென்று அப்பாவிடம் நிறைய கேட்கவேண்டும் என்று நினைத்தேன். அப்பாவிடம் பேசுவதற்கு அம்மாவும்,தம்பியும் பயப்படுவார்கள். ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் பயம் இல்லை.

'அப்பா, நீங்கதான எங்களுக்கு தமிழ் கிளாஸ் எடுத்தீங்க?'

'ஆமாம்'

'பாரதியார் கவிதையெல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க'

'ஹ்ம்ம்'

'அப்புறம் எப்படிப்பா உங்களால ஃபிரெண்ட்ஸ்கிட்ட எதுவும் வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு சொல்ல முடிஞ்சுச்சு'

'அதுக்கும், இதுக்கும் என்னம்மா சம்மந்தம்'
லலிதா சொன்னதை சொன்னேன்.

'மண்டு. நான் உன்ட்ட சொன்னது தெரியாதவங்க ஏதாவது குடுத்தா வாங்கக் கூடாதுன்னு. அதே மாதிரி ஃபிரெண்ட்ஸ் குடுத்தாலும் வாங்க வேண்டாம்னு ஏன் சொன்னேன்னா, அவங்க ஒவ்வொரு நாளும் ஏதாவது குடுப்பாங்கன்னு நம்மள அறியாம எதிர்பார்ப்பு வந்துரும். அவங்களுக்கு நம்ம மேல வெறுப்பு வர்றதுக்கு அந்த ஒரு காரணம் போதும்' என்றார்.

அவர் என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை என்றாலும் நான் லலிதா வீட்டில் சாப்பிட சம்மதம் தெரிவிக்கிறார் என்று மட்டும் புரிந்தது.

'நீ, தாராளமா அவங்க வீட்ல போய் சாப்பிடு' என்றார்.

லலிதாவிற்கு ஃபோன் பண்ணினேன்.

'ஆண்டி, லலிட்ட குடுங்க'

லலிதாவிடம் கொடுத்தார்.

'ஹாம், சொல்லுடி'

'கிறிஸ்மஸ் அன்னைக்கு மூணு நேரமும் உங்க வீட்ல தான் சாப்பாடு. போதுமா' என்று சொல்லிவிட்டு அப்பாவைப் பார்த்தேன். அப்பா சிரித்தார்.

லலிதாவிற்கு பயங்கர சந்தோசம்.
-------------------------------------
அந்த லலிதாவை மீண்டும் பார்த்ததில் எனக்கும் சந்தோசம் மட்டுமல்ல. தம்பியின் ஆபரேஷன் பற்றிய கவலையும் போய்விட்டது. எனக்கு அவள்மீது அவ்வளவு நம்பிக்கை.

ஆபரேஷன் செய்வதற்கு முன்னதாகவே பில் கட்டிவிடவேண்டும் என்று சொன்னார்கள். அப்பா ரங்கசாமி மாமாவிற்கு ஃபோன் செய்கிறார். அவர் ஃபோன் எடுக்கவேயில்லை. எங்கள் அனைவருக்கும் கவலைத் தொற்றிகொண்டது.

நாங்கள் பேசுவதைக் கேட்ட ஒரு நர்ஸ், 'ஜெனிஃபர் மேடத்துகிட்ட சொன்னீங்கன்னா அவங்க ரெகமெண்ட் பண்ணுவாங்க. அவங்க ரெகமெண்ட் பண்ணி நெறைய பேருக்கு பில் பாதியா கொறச்சிருக்காங்க. அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க' என்றார்.

நான் லலிதாவிடம் உதவி கேட்கலாம் என்று முடிவுசெய்தேன். லலிதாவின் உண்மையான பெயர் ஜெனிஃபர் கிறிஸ்டி.

கண்டிப்பாக எனக்காக உதவி செய்வாள் என்று தெரியும். அந்த தைரியத்தில் அவளைப் பார்க்க அப்பாவை அழைத்துக்கொண்டு சென்றேன்.

'மேடம் ஒரு பேஷண்டை பாத்துட்டு இருக்காங்க. அவங்க வந்ததுக்கு அப்புறம் நீங்க போங்க' என்றார் அவரது கன்சல்டிங் அறைக்கு வெளியே இருந்த பெண்.

மனதில் ஒரு சின்ன நெருடல். இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்த்திருக்கிறோம். அவள் ஒருவேளை தப்பாக எடுத்துவிட்டாள் என்றால் என்ன செய்வது. அவள் அப்படி நினைக்கமாட்டாள், அவள் எனக்காக எப்போழுதுமே விட்டுக்கொடுப்பவள். அவள் மனதில் அப்படி ஒரு எண்ணம் வரவே வராது. ஆனால் எனக்கு பணத்தைவிட என் லலிதாதான் முக்கியம். லலிதா மட்டும் போதும். என் நகைகளை விற்று பில் கட்டிவிடலாம். அவர்கிட்ட சொல்லி எப்படியாவது சமாளிச்சுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

'அப்பா வேண்டாம்பா. நாம அவள தொந்தரவு பண்ணக் கூடாது'. என்று அப்பாவிடம் சொல்லி அவரை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்றேன்.

எதிர்பார்ப்போடு காத்திருந்த அம்மாவிற்கு வாடிப்போன எங்களது முகத்தைப் பார்த்தவுடன் விஷயம் புரிந்தது.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது , லலிதாவிடம் உதவி கேட்கச் சொன்ன நர்ஸ் அங்கு வந்தார்.

'மேடம், இந்தாங்க பில் கட்டுனதுக்கான ரெசிப்ட். ஜெனிஃபர் மேடம் உங்க பில்லைக் கட்டீட்டாங்க. நான் சொல்லல அவங்க ரொம்ப நல்லவங்கன்னு'

லலிதாவிற்கு நன்றி சொல்ல ஓடினேன்.. அவள் அங்கு இல்லை.
-------------------------------------
நாங்கள் இதுவரைக்கும் எந்த விஷயத்திற்காகவும் சண்டை போட்டதில்லை. காரணம் லலிதா அவ்வளவு நல்லவள். எல்லாம் விட்டுக் கொடுத்துவிடுவாள்.

படிப்பிலும் அவள் கெட்டிக்காரி. அவள்தான் எப்பொழுதும் வகுப்பில் முதல் மார்க் எடுப்பாள்.

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் பக்கத்து வீட்டு பையன், குட்டி ஓடிவந்து என்னிடம், 'அக்கா, ப்ரேம் அண்ணனும், சிவா அண்ணனும், மோகன் அண்ணனும் சிவா அண்ணன் வீட்ல தண்ணியடிச்சிட்டிருக்காங்க' என்றான்.

அதைக்கேட்டவுடன் ஒருக்கணம் என் உயிரே போய்விட்டது. அப்பொழுது ப்ரேம் பத்தாவதுதான் படித்துகொண்டிருந்தான். அதுமட்டுமல்லாமல், அன்று தண்ணியடிப்பது என்பது மிகக் கேவலமான செயல்.

நானும் லலிதாவும் சிவாவின் வீட்டிற்கு ஓடினோம்.
கதவை தட்டியபொழுது, முதலில் சிவா வந்தான், அதற்குப் பிறகு ப்ரேமும் வந்தான்.

அவன் தலை முடியை பிடித்து ஆட்டியவாறே, 'ஏன்டா, இப்படி பண்ணுன. உனக்கு அப்பா என்னடா கொற வெச்சார்' என்று கத்தினேன்.

என் கையை தள்ளி விட்டுவிட்டு, 'பேசாம வீட்டுக்கு போக்கா' என்றான்.

'என்னடா, என்னையவே அடிக்க வர்றியா'

'நீ பேசாம போயிரு. உன் மேல எனக்கு ஏற்கனவே கோபம். இதுல எதையாவது பேசி என்ன…'

'என்னடா பண்ணுவ. என்னடா உனக்கு என் மேல கோபம். நான் என்னடா பண்ணுனேன் உனக்கு'

'நீ எதுக்கு எனக்கு அக்காவ வந்து பொறந்த'

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

'நீ, இல்லனா, நானும் சிவா மாதிரி ஜாலியா இருந்திருப்பேன். அவங்க வீட்ல ரெண்டும் பசங்க. ஒரு பிரச்சனையும் இல்ல'

என்னால் அந்த வார்த்தைகளை தாங்கமுடியவில்லை.

'ஏன்டா, இப்படி பேசற. அவ உன் அக்காடா' என்றாள் லலிதா

'நீயும் பேசாமா போயிரு. உன் ஃப்ரெண்ட்டப் போய் எங்கயாவது சாகச் சொல்லு. அப்பத்தான் எனக்கு நிம்மதி' என்றான் அவளிடம்

நாங்கள் ஒன்றும் பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்.

கிளாஸ்ஸில் அழுதுகொண்டிருந்த என்னிடம் ஏன் அழுகறன்னு மற்ற பெண்கள் கேட்டபொழுது, 'அவள் பேகில் வெச்சிருந்த பத்து ரூபாய காணோம்' என்று சொன்னாள் லலிதா. மற்றவர்கள் முன் நான் அசிங்கப் படுவதை அவள் விரும்பவில்லை.

அப்பாவிற்கு, விஷயம் தெரிந்து, உடனே தஞ்சாவூரிலிருந்து செங்கல்பட்டிற்கு மாற்றம் வாங்கிவிட்டார். அந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இருந்தது. ஆகையால் நாங்களும் அதே பள்ளியில் அப்பாவின் கண்காணிப்பிலேயே படித்தோம். லலிதாவை விட்டுப் பிரிந்ததை தாங்கமுடியவில்லை, அவளாலும் தாங்க டியவில்லை. காலங்கள் ஓடஓட அது மாறிவிட்டது.

அதற்குப் பிறகு இப்பொழுதுதான் அவளைப் பார்க்கிறேன்.
-------------------------------------
நான் நினைத்தது போலவே, ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. நினைவு திரும்பிய பொழுது என்னையும், தம்பியையும் ஒரே அறையில் பக்கத்து பக்கத்து கட்டில்களில் படுக்க வைத்திருந்தார்கள். லலிதாவின் வருகைக்காக காத்திருந்தேன்.

லலிதா வந்தாள். ரிப்போர்ட்களைப் பார்த்துவிட்டு, 'ஒண்ணும் பிரச்சனை இல்லை. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் ஆயிறலாம்' என்றாள் அவளது வழக்கமான புன்னகையோடு.

பணம் கட்டியதற்கு இதுவரை அவளுக்கு நன்றி சொல்லமுடியவில்லை.

லலிதா அறையை விட்டு சென்றவுடன் தம்பியைப் பார்த்தேன், அவன் கண்களில் கண்ணீருடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment